16/10/2018

கும்பத்துமால் - ஒரு பண்பாட்டுக் கோலம்.

உயிரியல் ஒழுங்கில் பரினாமம் பெற்ற ஒரு விலங்கினம்தான்  மனித இனம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எல்லா ஜீவராசிகளுக்கும் அனைத்துவிதமான உணர்வுகளும் உள்ளபோதும், சிந்தனையும் பேச்சும்,  வாய்திருப்பது நமக்கு மட்டுமே. அதற்கான மனம் உடையவர்களாகையால் நாம் மனிதர்கள். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் எனப் பொருள் கொள்ளலாம்.  நினைக்கும் சிந்தனைக் கருவிதான் மனம்.  

உலக   உயிர்கள் அனைத்தையும்,   ஓரறிவுயிர்   முதலாக,   ஆறறிவுயிர்   வரையிலாக,   தமிழ் இலக்கண நூல்கள்   வகுத்துக்   காட்டியுள்ளன.
“ஒன்றறி வதுவே வுற்றறி வதுவே 
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே ” என்கிறது பழந் தமிழ் நூலான தொல்காப்பியம். 

ஐம்புலன்களின்பாற் செயற்பட்ட விலங்கினம், மனம் எனும் சிந்தனைப் புலனூடாக பரினாமம் பெற்று மனித இனமாக மாற்றங்கண்டுள்ளது.  மனத்தினை அன்பின் வழியாகப் பயனிக்கச் செய்து, தீய எண்ணங்களை மறைத்தல் என்பது, அறிவின் வழி வளர்சியுற்ற இனத்திற்கு அவசியமானதாகிறது. அவ்வாறு உய்ந்துயர்வதே இறை நிலை என்கிறது ஆன்மீகம்.

சேற்றில் புரளும் எருமையினம் போல், அழுக்காற்றில் கிடந்துழலும் மனத்தினை, கலைகளால் தூய்மைப்படுத்தி, அழகுடையதாக அலங்கரித்து,  செழுமைப்படுத்தும் செயல்வினைதான் மஹிஷாசுர சங்காரத்தை உச்சமாகவும், விஜயதசமியை, வெற்றித் திருநாளாகவும், கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் உட்பொருள் என்பது  நாம் கொள்ளும் விளக்கம்.

தமிழகத்து நவராத்திரி காலங்கள், கொலுஅலங்காரக்களிலும், கலைநிகழ்வுகளோடும், களைகட்ட, இலங்கையின் வடபுலத்தே, ஆலய வழிபாடுகளுடனும், வீடுகளிலும், கல்விநிலையங்களிலும், நடைபெறும் வாணிபூசை, அல்லது சரஸ்வதிபூசைக் கொண்டாட்டங்களுடனும், நிறைவு கொள்ள, கிழக்கின் நவராத்திரிக் கொண்டாட்டங்களோ வேறுவிதமாக அமைந்திருக்கும். அவைதான் "கும்பத்துமால்கள் ".

ஊரின் மத்தியில் அல்லது எல்லைகளில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்களின் வெளிப்பிரகாரத்தில், ஊர்கூடிக் கும்பத்துமால் கட்டும். மால் என்ற சொற்பதத்துக்கு கொட்டகை அல்லது பந்தல் எனப்பொருள் கொள்ளலாம். அந்தவகையில் பார்ப்போமேயானால், கும்பம் + மால் = கும்பத்துமால், கும்பம் வைக்கும் கொட்டகை எனப் பொருள்படும். கோவில்களில் கும்பம் வைப்பதோ கொலுவைப்பதோ கிழக்கில் அதிகளவு இல்லை என்றே சொல்லலாம். பாடசாலைகளில் சரஸ்வதிபூசை கொண்டாடுவதோடு நவராத்திரிக் கொண்ணடாட்டம் முடிந்துவிடும்.

நவராத்திரி என்றால் கும்பத்துமால்களில் ஊரே திரண்டு திருவிழாவாகக் கொண்டாடுவது கிழக்கின் தனித்துவச் சிறப்பு. பிற்காலத்தில் நகரப்புறங்களில் மாற்றங்கள் பல வந்து விட்ட போதும், கிராமங்கள் பலவும், கும்பத்துமால்களுடனேயே நவராத்திரியை இன்றளவும் கொண்டாடி வருகின்றன.
நவராத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன், ஊர்கூடிப் பேசுவார்கள். கும்பத்துமால் வைப்பதையும், தலமைப்பூசாரியையும் ( இவர் மந்திர தந்திரங்களில் தன் திறமையை ஏற்கனவே வேறுபல நவராத்திரிக் கும்பத்துமால்களில் நிரூபித்தவராக இருப்பார்) தீர்மானிப்பதுடன் ஆரம்பமாகும். தொடர்ந்து வேகமாக கும்பத்துமால் கட்டப்படும். சுமார் நூறு மீற்றர் நீளமான கொட்டகைகள் காட்டுத்தடிகளால் கட்டப்பட்டு, தென்னங்கிடுகுகளால், வேயப்பட்டு, வெள்ளைத் துணிகளால் அலங்கரிக்கப்படும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வேப்பிலைக்கொத்துக்களும், அலங்காரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். ஊரின் முக்கியபுள்ளிகள் இரவலாகக் கொடுத்த பெற்றோல்மாக்ஸ் லைற்றுக்கள் வெளிச்சம் தரும்.
நவராத்திரி ஆரம்ப நாளன்று கும்பத்துமால்களின் ஒரு அந்தத்தை கர்பக்கிரகம் போல அமைத்திருப்பார்கள். அதனுள்ளே கும்பங்கள் வைக்கப்படும். பெரியகுடங்களின் உள்ளே செப்புத் தகடுகளில் எழுதிய யந்திரங்களை வைத்து, நெல்லால் நிரப்பி, வேப்பிலை வைத்து, மேலே தேங்காய் வைத்து, கும்பங்கள் வைக்கப்படும். தலமைப்பூசாரி கும்பங்களை ஸ்தாபிப்பார். அன்றைய தினமே நேர்த்திக்காக கும்பமெடுப்பவர்களுக்கான காப்புக்கட்டுதலும் நடைபெறும். இப்படிக் கும்பமெடுப்பவர்கள். அந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருப்பார்கள். கும்பத்துமால்களில் நடைபெறும் பூசைகாலங்களில் இவர்கள் கலை (உரு) ஆடுவார்கள். அல்லது ஆடவைக்கப்படுவார்கள். அவ்வாறு ஆடுகின்றவர்களை ‘ பூமரம் ‘ என அழைப்பார்கள்.

கும்பத்துமால்களில் எனைக்கவர்ந்த விடயம், அங்கே நடைபெறும் கிராமியக் கலைநிகழ்வுகள். பறையும், உடுக்கும், பிரதான வாத்தியங்கள். மாரியம்மன் தாலாட்டுப்பாடல்கள் முக்கிய இசை நிகழ்ச்சி. கரகாட்டம் பிரதான ஆடல் நிகழ்ச்சி. இப்படியான நிகழ்ச்சிகளுடன் நவராத்தி நாட்களின் இரவுகள் ஆரம்பமாகும். சுமார் பத்துமணியளவில், பூசைக்குரிய பொருட்கள், உபயகாரர் வீட்டிலிருந்து, ஊர்வலமாக பறைமேளம் அதிர அலங்காரமாக எடுத்து வரப்படும். இதை ‘மடைப்பெட்டி ‘ எடுத்து வருதல் என்பார்கள். இந்த மடைப்பெட்டியின் வருகையோடு, ஊர்முழுவதும், கும்பத்துமாலுக்கு வந்துவிடும். மடைப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் படையல் செய்யப்பட்டதும், பூசை ஆரம்பமாகும்.

உச்சஸ்தாயில் பறை ஒலிக்கப் பூசை ஆரம்பமாகும். நேர்த்திக்குக் கும்பமெடுப்பவர்கள் குளித்து முழுகி, துப்பரவாக வந்து முன்னணியில் நிற்பார்கள். பறை அதிர அதிர அவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அவர்களைவிட வேறுசிலரும் ஆடுவார்கள். ஆடத்தொங்கிய அவர்களை மஞ்சள் நீரால் நனைப்பார்கள். அவர்கள் ஆடிஆடி உச்சம் நிலைபெறும்போது, கும்பங்கள் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்குச் சென்று பூசாரியிடம், தாங்கள் என்ன தெய்வத்தின் கலையில் வந்திருக்கின்றோம் என்பதைச் சைகையால் சொல்வார்கள்.  அந்தத் தெய்வங்களுக்குரிய அணிகலன்களை அல்லது ஆயுதங்களை விரும்பிக் கேட்பார்கள். பூசாரியார் அவர்கள் கேட்பதைக்கொடுத்தால்  முகத்தில் மகிழ்ச்சி தெரியப் பெற்றுக் கொள்வார்கள்.

தம்பலகாமத்துக் கும்பத்துமால்களில் காளிராசா அண்ணன் கலையாட வந்தாலே தனிக்களை பிறந்துவிடும். சனங்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் பல இருக்கும். ஏனெனில் காளிராசா அண்ணையில் பலவித தெய்வக்கலைகள் உருவெடுத்து ஆடும் என்பார்கள். மாரியம்மன், வீரபத்திரர், அனுமான்...எனப்பல தெய்வங்களின் உருக்களில் ஆடுவார் எனச் சொல்வார்கள். மாறி மாறி பல உருக்களில், அவர் ஆடும்போது செய்யும் செயல்களை வைத்து அந்த நேரத்தில் என்ன கலையில் ஆடுகின்றார் எனச்சொல்வார்கள். அனுமான் கலையென்றால், குரங்குபோல் ஒருவிதநடையும், வாழைப்பழம் சாப்பிடுதல் போன்ற சேட்டைகளும் நடைபெறும். வீரபத்திரர் கலையில் ஆடினால், சாட்டைக்கயிறு வேண்டுவார். அவர் மாரியம்மனாகப் பாவனைப்பண்ணி ஆடுவதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள்.
 - வீரபத்திரராக கலையாடி -
"கந்தன் கருணை" படத்தில் வீரவாகு தேவராக சிவாஜி கணேசன் மிடுக்கான நடையொன்று நடப்பாரே, அதுபோன்ற மிடுக்கும், பெண்மையும் கலந்த, கலவையான அந்த ஆட்டத்தில், சிலம்பு மாதிரியான கைவளையல்களை கைகளில் அணிந்துகொண்டு, வேப்பிலையை ருசித்துக்கொண்டு, கோலாட்டக் கம்புகளை கைகளில் வைத்துக்கொண்டு, மாரியம்மன் தாலாட்டுக்கு ஆடுவார் ஒரு ஆட்டம்.  அது மிக அருமையாக இருக்கும். இந்த இடத்தில் மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில் கெட்டிக்காறரான காத்தமுத்து அண்ணையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

காத்தமுத்து அண்ணனுக்கு நல்ல 'கணீர்' எனும் வெண்கலக்குரல். அத்துடன் நன்றாக உடுக்கு அடிப்பார். அவர்பாட, அவருடன் இணைந்து, அவரது  உடுக்கும் பாடுவது போல் இனிமையாக இருக்கும். காளிராசா அண்ணர் மாரியம்மன் கலையில் ஆடத் தொடங்கினால், காத்தமுத்து அண்ணர் கூட்டத்துக்குள் எங்கிருந்தாலும், இழுத்து வந்து முன்னுக்கு கொண்டு வந்து விட்டு, பாடச் சொல்லிச் சைகை காட்டுவார். காத்தமுத்தண்ணரின் மாரியம்மன் தாலாட்டில்,  காளிராசா அண்ணர் ஆடும் ஆட்டம் அலாதியான  அழகோடிருக்கும்.
 - மாரியம்மன் கலையாடி -
இந்தக் கலை ஆடல் நடந்து கொண்டிருக்கும் போது, மாந்திரீகப் போட்டியொன்றும் நடக்கும். மாந்ததரீகம் அறிந்தவர்கள் கலை ஆடுபவர்களின் ஆடல்களை மறைந்து நின்று தங்கள் மாந்திரீகசக்தியால் கட்டுபடுத்துவார்கள். அப்படிக்கட்டுப்படுத்தும்போது, கலைஆடுபவர்கள் ஆடி, மயங்குவார்கள். அவ்வாறு மந்திரக் கட்டுக்களால் கலையிழப்பவர்களை  கும்பத்துமாலின், தலமைப்பூசாரி  மாற்று மந்திரம், அல்லது கட்டவிழ்ப்பு மந்திரம் சொல்லி, அந்த மந்திரக்கட்டை அவிழ்ப்பார். அப்படி அவிழ்க்கப்பட்டதும், கலை ஆடுபவர் மீளவும் ஆடுவார். அப்படியான கட்டுக்கள் சிலவேளை மணிக்கணக்கில் நீளும்.  மந்திரக் கட்டுக்கள் அவிழ்க்கப்படும் வேளையில் உன்மத்தமாக ஆடத் தொடங்கும் கலையாடிகள், கூட்டத்துக்குள் மறைந்திருந்து கட்டு மந்திர உச்சாடனம் சொல்பவரை சிலவேளை தாக்கவும் செய்வார்கள். இப்படியான மந்திரப் போட்டிகளுடன் தொடரும், கலை ஆட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் நீளும். அதை ஆவலோடு  பார்த்து ரசித்திருக்கும் மக்கள் கூட்டம்.

தொடர்ந்து ஒன்பது நாட்களும், கும்பத்து மால்களில் நடைபெறும் இந்த விழாவில், பத்தாம் நாள் விஜய தசமி இரவு கன்னி வாழை வெட்டுவார்கள்.  பூசையின் நிறைவில், கும்பங்கள், கரகங்களுடன், கலையாடிகளுடன், ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்து, பதினொராம் நாள் காலையில், ஆற்றில் கும்பங்கள் சொரிவதுடன் நிறைவுபெறும். அவ்வாறு ஊர்வலங்கள் செல்லும் பாதைகளில், மந்திரப் போட்டிகளும் நடக்கும். ஊர்வலம் செல்லும் பாதைகளில், வழிமறித்துச் செய்யப்படும் மந்திரக்கட்டினைத் தாண்டிச் செல்ல முடியாது கலையாடிகள் தவிப்பார்கள். அந்த இடத்தில் தலைமைப் பூசாரி, மாற்று மந்திரத்தால் தடை உடைக்கவேண்டும். இந்தத் தடை சில இடங்களில் மணிக்கணக்காகும். சிலவேளைகளில் அது முடியாமல் போகையில் தடை ஏற்படுத்தியவரே அதனைத் தளர்த்தி அவிழ்க்கவும் செய்வார். அவ்வாறு தடைகள் நீக்கப்படும் போது, பூசாரியாரும், கலையாடிகளும், அந்த மந்திர வித்தையாளரை வாழ்த்தி மதிப்பளிப்பார்கள். இதில் மிகக் கடுமையான போட்டிகள் நடந்தாலும், யாரும் ஒரு எல்லை மீறிச் செய்வதில்லை. அதனை தெய்வக் குற்றமாகவும் கருதிய நம்பிக்கையாளர்கள் அவர்கள்.

- கும்பங்களின் ஊர் உலா -
போட்டிகள் மட்டுமன்றி, மரியாதை வரவேற்புகளும் நிகழும். எல்லா வீடுகளிலும், நிறைகுடம், பாணக்கம் எனும் தேசிக்காய், சர்க்கரை சேர்த்த நீராகாரம், கோப்பி, தேநீர், போன்றன வழங்குவார்கள். தொடர்ச்சியான துன்பங்களுக்காளான வீடுகளில் சிறப்பு மடைகளிட்டு, கலையாடிகளிடம் அருள்வாக்குக் கேட்பார்கள். நேர்த்தி வைப்பார்கள். காணிக்கை செலுத்துத்துவார்கள்.

கிழக்கின் வித்தியாசமான இந்த நவராத்திரி விழாக்கள், அம்மண்ணின் கிராமியக் கோலங்களாக நடைபெற்று வந்தன. இக்கோலங்கள்  அப்பகுதிகளில் அருகி, ஒரு சில இடங்களில் மட்டுமே  தற்போது நடந்து வருகின்றன. இக் கட்டுரையினை வாசித்து முடிக்கையில், இதிலென்ன பெரிய கலைநுட்பம் இருக்கிறது எனச் சிலரது மனங்களில் கேள்வி எழலாம். ஆனால் இது  முக்கியமான நாட்டார் கலை வடிவம் என்பது  திண்ணம்.

கும்பத்து மால் வழக்கம்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில், திருகோணமலையிலே பிரித்தானியப்படையின் கீழிருந்த சீக்கியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், கும்பம் ஆடுபவர்களுக்கு போர்த்துக்கேயர் காலத்தில் அரிசி பருப்பு வழங்கப்பட்டதாயும் ஒரு செவிவழி செய்தி உண்டென ஒரு கருத்தும், சேரநாட்டு அரசனால் பல கண்ணகி கோயில்கள் கிழக்கில் கட்டபட்டதாகவும் , அதன் நீட்சியாக, ஆரிய பண்பாடற்ற  நவராத்திரி விழா தான் உண்மையான திராவிட பண்பாட்டு விழாவாக இருக்கலாம் என மற்றொரு கருத்தும், இதனை நான் இணையத்தில் முன்பு எழுதியிருந்த போது,  தெரிவிக்கபட்டன. உண்மையில் இவை தொடர்பில் நானும் ஆழமாக அறிந்திருக்கவில்லை. ஆயினும் வடக்கின் கலாச்சாரக் கூறுகளுடன் பெரிதும் மாறுபட்டிருந்ததை அவதானித்திருக்கின்றேன். 

வடக்கில் நவராத்திரி கும்பம் வைப்பதென்பது, கோவிலாயினும், வீடாயினும், நவதானிய முளையிட்டு, அதன் மேலே நீர் நிறைந்த கலசமும், அதன் மேலே மாவிலை, தேங்காய் வைத்துக் கும்பம் தயாராகும். ஆனால் இங்கு வைக்கப்படும் கும்பங்களில் வேப்பிலை பிரதான அங்கம் பெறும்.
ஊர் உலாவிற்கு எடுத்துச் செல்லும் கும்பங்களின் அமைப்பும் அலங்காரமும் கூட வித்தியாசமானதாகும். நீண்ட கூம்பு வடிவத்தில் அலங்கரிக்கப்படும் கும்பத்திலும் வேப்பிலை முக்கியம் பெறும்.  இவ்விதமான அலங்காரங்கள், கேரளம், மற்றும் வடநாட்டுப் பாணிகளில் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.
 - யாழ்ப்பாணத்து வன்னி வாழை -
அதேபோல் வாழைவெட்டுச்  சடங்கிலும்  பாரிய மாறுபாட்டினைக் காணலாம்.  யாழ்ப்பாணப்பகுதிகளில்  மானம்பு உற்சவத்துக்காக நடப்படும் வாழைகள் குலைபோட்ட வாழைகளாகவும்,  மகிஷ சங்காரத்தின் போது மகிஷன் வன்னி மரமாகி நின்றான் என்பதனால், நடப்படும் வாழைகளில் வன்னி மரத்தினை இலைகளைச் சொருகி, அதனை "வன்னி வாழை"யாகவும் அழைப்பார்கள். ஆனால் கும்பத்து மால்களில் வெட்டப்படும் வாழைகள், ஏழு அல்லது ஒன்பது இலைகள் விரிந்த இளங் கன்றுகளாக அமையும்.  அதனால் அவற்றைக் "கன்னி வாழை" என அழைக்கும் மரபும் உண்டு. ஆனால் இவைகள் தாண்டி, இது ஒரு தமிழ் மரபு என நான் கருதுவதற்கு பிறிதொரு காரணமுளது.

மந்திரம், மகத்தான சக்தி கொண்ட ஒரு மனக் கருவி என்கிறார்கள் பெரியோர்கள். மந்திரம், யந்திரம் என்கிற அறிவியல் கிழக்கு மாகாணத்திற்கு சிறப்பானது.  இது தீமையான வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது அல்லது செயற்படுத்தப்பட்டுவிட்டது. இன்றைய மருத்துவ விஞ்ஞான உலகில், "மனத்தொழில்நுட்பக்கருவிகள்" என்கிற அறிவியல் முக்கியத்துவம் பெறுகிறது. விபத்துக்களில் அங்கங்களை இழப்போருக்கு, செயற்கைப் பாகங்களைப் பொருத்தி, அவற்றை செயற்படுத்தும், வழிபற்றிய ஆய்வுத்துறையில் இதுபற்றி நிறைய தேடப்படுவதாக அறிகின்றோம். ஆனால்   "மனத்தொழில் நுட்பக்கருவிகளை" மிகச் சாதாரணமாக பயன்படுத்திவந்த பாரம்பரியம் கிழக்கு மாகாணத்திற்கு இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தில் உச்சரிக்கபட்ட மந்திர உச்சாடனங்கள் தமிழ்மொழியில் இருந்ததென்பது ஆச்சரியமான உண்மை.
கும்பங்கள், ஊர்மனைகளில் சுற்றிவருகையில், அடிக்கப்பெறும் பறை, உடுக்கு, என்பவற்றின் ஒலிகளும், கலையாடிகளுக்கு ஊற்றப்படும் மஞ்சள்நீரும், வீசப்படும் சாம்பிராணிப் புகையும், அந்த ஊர்மனைகளில் நிரவியிருந்த எதிர்மறை அலைகளை விலக்கி விடுகின்றன எனக் கொள்ளலாம். கும்பம் சுற்றிச் சென்ற இடங்களின், அன்றைய காலை தெய்வீக மணத்துடன் புலரும். கும்பம் சொரியும் அன்றைய பொழுதில் மழைவருவது என்பது மாறாத ஒரு பண்பாக இருந்துள்ளதைப் பலரும் அறிவர். இயற்கையோடினைந்த இப் பண்டிகையை, ஒரு தமிழ் நாட்டார் கலைவடிவமாக நான் காண்பதன் காரணமும் இவையெனலாம்.

படங்கள் : படம்1- நம்ம வீட்டுக் கொலு.
படங்கள் 2-6 தம்பலகாமம் சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டவை.
படம் 7 நல்லூர் இணையத்தில் பெறப்பட்டது.
படம் 8 சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டது



04/10/2018

மத்திய தரைக்கடலின் மகாராணி !

இலக்கியப் பரிச்சயம் உள்ள எல்லோரும் அறிந்திருப்பர் ஷேக்ஸ்பியரின் ' வெனிஸ் நகர வணிகன் ' கதை. பள்ளிக் காலங்களில், அந் நாடகத்தில் வரும் நாயகன் அந்தோனியோவாக நடித்திருக்கிருக்கின்றேன். அப்படித்தான் வெனிஸ் என்னும் பெயர் எனக்கு அறிமுகமாகியது. பின் சரித்திர பாடத்தில் மார்க்கோபோலோவை படிக்கும் போது வெனிஸின் மீதான பிரமிப்பு ஏற்பட்டது. என்றாவது ஒருநாள் வெனிஸின் தெருக்களில் நடந்து திரிய வேண்டுமெனும் எண்ணங்கள் ஏதும் இருந்ததில்லை அப்போது.
 - படங்களின் மேலே அழுத்தினால் பெரிதாகக் காணலாம் -
ஐரோப்பாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர், மிதக்கும் நகரம்  வெனிஸ் காண்பதில் ஆர்வம் பிறந்தது. காரணம் அதன் கலைத்துவம் தெரிந்து கொண்டதனால். உலகில் சிறந்த கன்னாடிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், என்பவற்றை உருவாக்கும் ஒரு கலைநிலமாகவே காட்சி தருகிறது வெனிஸ்.  இது எவ்வாறு..? வெனிஸின் தோற்றம்  தெரிந்தால் புரியும் அந்த இரகசியம்.
5000 - 7000 ம் நூற்றாண்டு காலப்பகுதியில், மூர்க்கத்தனமான கொள்ளையர் சமூகத்திடமிருந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓடிய ஒரு சமூக மக்கள், பாதுகாப்பான தங்கள் வாழ்விடமாகத்  தெரிவு செய்த இடம்தான் இன்றைய வெனிஸ். அட்ரியாட்டிக் கடலின் வட மேற்கு முனையின், வெனித்தேரியன் குடாவில், கடலில் கலக்கும் கழிமுகத்தில், நதிகள் கொண்டு வந்த சேற்றுமண்ணிலான சதுப்பு நிலத் திட்டுக்களாக அமைந்த 118 தீவுக் கூட்டகளாலும், அவற்றினிடையே ஓடும் 150 அளவிலான நீரோட்டங்களாலும் ஆனதுதான் வெனிஸ்.
உயிரச்சத்தில் ஒடி வந்த மக்களுக்கு, பாதுகாப்பான மண்ணாக  இருந்தபோதும், வாழ் நிலத்திற்கான தன்மையினை அந்நிலம் கொண்டிருக்கவில்லை. சாவதற்கல்ல; வாழ்க்கை வாழ்வதற்கே என்றுணர்ந்த மக்கள், வாழ்விற்கான ஆதாரங்களையும், வாழ்விடங்களையும், பெரும் முனைப்பில் அமைத்தெடுத்தார்கள். அது ஒரு சிலநாட்களில்  முடிந்ததல்ல, நூற்றாண்டுகள் தொடர்ந்த பெரும் உழைப்பு.

இயற்கையின் நீரோட்டங்களில் பயணம் செய்து, ஈட்டிய பொருட்களில் வாழ்வமைத்தார்கள். சதுப்பு நிலங்களில் மரங்களாலான தூண்களை  ஆழப்புதைத்து, தரையின் வலிமையான பாகம் வரையில் அவற்றை உள் நிறுத்தி, அவற்றின் மேலே, வதிவிடங்களைக் கட்டினார்கள். ஆழப் பெருங்கடல் தாண்டிப் பயணிக்கப் படகுகள் கட்டினார்கள். கட்டிய படகுகளில் சென்று வாணிபம் செய்தார்கள். செல்வம் குவிந்தது, சிறப்பும் சேர்ந்தது. அறிவையும் பொருளையும் முக்கியத்துவம் உணர்ந்து பயன்படுத்தினார்கள்.
கிரிஸ்டோ போரோ சபாடினோ எனும் நீர் வல்லுனரின் ஆலோசனையில், நீரோட்டங்களையும், வடிகால்களையும் ஒழுங்குபடுத்தினர். ஓவியத்திலும், கட்டிடக் கலையும் சிறந்த பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற  கலைஞர்களின் அறிவுறுத்தலில், குறுகலானன தெருக்கள், பயணக் கால்வாய்கள், அவற்றின் மேலே பாசாரிகளுக்கான பாலங்கள், குடியிருப்புக்கள், கோபுரங்கள், மாட மாளிகைகள், கலங்கரை விளக்குக் கோபுரங்கள், என அத்தனையையும் பார்த்து, ரசித்துக் கட்டினார்கள். அழகிய வெனிஸ் நகரம் அற்புதமாக உருவாகியது.
வர்த்தக மையமாக, பொருளாதார பூமியாக, வெனிஸ் நகரம் பொலிவுபெற, கலைஞர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் கனவுதேசமானது வெனிஸ். 'மத்திய தரைக் கடலின் மகாராணி' என, அழகுறு கலைகளால் மகுடம் சூட்டி மகிழ்ந்து கொண்டாடினார்கள். அன்று தொடங்கிய  கண்ணாடிப் பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்குமான பாரம்பரியம், இன்றுவரை உலகப் பிரசித்தம். ஆடலும், பாடலும், அழகுறு கலைகளும் நிறைந்த மண் என்பதால், காதலர் தேசமெனக் கொண்டாடுபவர்களும் உண்டு.
வெனிசின் முரானோ ( Murano) தீவு, உயர்தர கண்ணாடிக் கலைப்பொருட்களின் பிறப்பிடம். தமக்கே உரித்தான தனித்துவமான பராம்பரியத்துடன் கண்ணாடியில் பல்வேறுவிதமான கலைப் பொருட்களைப் படைத்து வருகிறார்கள். நாம் பாரத்துக் கொண்டிருக்கையிலேயே,  கொதிகலனின் உருகியிருக்கும், கண்ணாடிக்கூழை, நீண்ட குழாய்களில்  தோய்த்து, இலாவகமாகச் சுற்றிச் சுழற்றி, குவளைகளாகவும், மலர்சாடிகளாகவும், மனம் விரும்பும் பிராணிகளின் வடிவங்களாகவும், மாற்றி மாயா ஜாலம் காட்டுகிறார்கள்.
சற்றே தொலைவில் தனித்திருக்கும் புரானோ (Burano)தீவு, நூல் வலைப்பின்னல் வேலைகளுக்குப் பிரசித்தம்.  அங்குள்ள வீடுகளின் வண்ணமயம் அதற்கும் மேலான உலகப் பிரசித்தம். கடும் வர்ணங்களில் காட்சி தரும் அவ்வீடுகளின், கதவுகள், சாளரங்கள், திரைச் சீலைகள், பூந்தொட்டிகள் என எல்லாவற்றினையும், வண்ணக் கலை நயத்தோடு பராமரிக்கின்றார்கள். அந்த அழகியலைக் காண்பதற்காகவே உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிக்கின்றார்கள்.
அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவ்வாறு வர்ணம் பூசத் தொடங்கியதன் பின்னால் ஒரு துயர் உள்ளது. பனிக்காலங்களிலும், கடல் சீற்றங்களின் போதும், தனித்திருக்கும் இத் தீவினை, பனிப்புகாரும், மேகக் கூட்டங்களும் பகலில் கூடத் தெரியாதவாறு மூடிவிடுமாம். அவ்வாறு மறைந்து போகையில், அடையாளங் கண்டு பயணிப்பதற்காகவே பளிச்சிடும் வர்ணங்களைப் பூசினார்கள். ஆனால் அதுவே அவர்களது பண்பாடும் பாரம்பரியமுமாகி, இன்று தனித்துவச் சிறப்பு அடையாளமுமாகி நிற்கின்றது.
வெனிசின் மற்றுமொரு சிறப்பு, கலாபூர்வமான முகமூடிகளும், களியாட்ட விழாக்களும்.  முன்னொரு காலத்தில் மாதக்கணக்கில் நடைபெற்ற, இக் களியாட்ட விழாக்களின் கால அளவு, இப்போது குறித்த சில தினங்களில், குறைந்த சில மணித்தியாலங்கள் மட்டுமேயெனச் சுருங்கி விட்டது. செல்வந்தர்கள் உலா வந்த தெருக்களில், சாமானியர்களுக்கும் சமநிலைக் கௌரவத்தினைக் கொடுக்கும் வகையில் அமைந்தது இந்த முகமூடிக் கலாச்சாரம். அதே வேளை தொற்று நோய்களின் தடுப்பாக அமைந்த முகமூடிகளை, அலங்காரமாகப் படைத்தார்கள் எனவும் சொல்கின்றார்கள். காரணம் எதுவாயினும் இன்று வரை தனக்கான தனித்துவப் பாணியில் மிளிர்கின்றன வெனிஸ் முகமூடிகள்.
வெனிஸின் தெருக்களில் மோட்டார் வண்டிகளைக் காண முடியாது. தீவுகளுக்கிடையில் வீதிகள் போன்ற நீரோட்டங்களில், இயந்திர விசைப்படகுகள் இப்போது பயனிக்கின்றன. ஆனால் முன்னைய காலத்தில் ' கொண்டோலா ' எனும் தடி ஊன்றிப் பயணிக்கும் சிறு படகுகளிலேயே பயணங்கள் நடந்திருக்கின்றன. இயந்திரப் படகுகள் வந்துவிட்ட போதும், பளிச்சிடும் கறுப்பு வண்ணத்தில், நீள்வடிவில் அமைந்த கொண்டோலாப் படகுகளில் மக்கள் பயணிக்கின்றனர்.
' கொண்டோலா' படகுகளில் பயணிக்கும் காதலர்களின் காதல் வாழும், கால்வாய்களின் மேலான பாலங்களில், பூட்டுக்களைப் பூட்டிய பின், கால்வாயில் சாவிகளைப் போடுவதால் காதல் ஜெயிக்கும் எனும் நம்பிக்கைளும் இன்றுவரை நிலைத்திருப்பதை நேரில் காணலாம்.
 
வெனிஸின் வணிகக் குடும்பமொன்றில்  பிறந்த மார்க்கோ போலோ, கிழக்காசிய நாடுகளில் மேற் கொண்ட பயணங்களின் போது கண்டுகொண்ட அனுபவங்களை, பின்னொரு காலத்தில் சிறையிலிருக்கையில், நூலாகப் படைத்தார். "மார்க்கோ போலோவின்   பயணக் குறிப்புக்கள்" மிக முக்கிய வரலாற்றுப் பதிவாகவும், சரித்திரம் சொல்லும் சான்றாகவும், ஆவணமாகியது.
 
செங்கல்லும் சாந்தும் கொண்டு உருவான கட்டிடங்கள் காலங்கடந்தும், காரை கிளம்பியும், நின்று நிலைப்பது, வெனிஸின் கட்டடிக் கலையின் சிறந்த தொழில் நுட்பம். டோஜஸ் அரண்மனையும், அதன் சூழலும், ஐரோப்பிய நாகரீகத்திலிருந்து மாறுபட்ட கட்டிடக் கலை வடிவங்கள். இன்னும் சொல்வதனால் வெனிஸ் நகரத்துக்கேயான தனித்துவப் பாணி அதுவெனவும் சொல்லலாம். சொர்க்கத்திற்கு இனையான மகிழ்வைக் கொடுத்த அந்தப் பூமியில் நரகமும் இருந்தது.
டோஜஸ் அரண்மனைக்கு அன்மையில் அமைந்துள்ள பாதாள அறையுட்பட பல அடுக்குகள் கொண்ட சிறைக்கூடம், மிகக் கொடூரமானது எனக் குறிப்பிடுகின்றார்கள்.   Menocchio திரைப்படத்தில், வெனிஸின் பாதாளச் சிறைதொடர்பான காட்சிகளில், அச்சிறையின் கடுமை கண்டிருக்கின்றேன். அச்சிறைகளின் பாதாள அறைகளில் அடைக்கப்படும் கைதிகள், உயிர் மீள்வது அபூர்வம். ஆயுட்கைதிகளும்,  மரணதண்டனைக் கைதிகளும்,  அரண்மனையின் நீதிமன்றிலிருந்து,  சிறைக்கூடத்திற்குச் செல்லும் வழியில் மூடிய பாலம் ஒன்றினூடாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் செல்கையில் வெளியில் நின்று உறவினர்களும், பாலத்தின் சிற்றிடுக்குகள் வழியாக கைதிகளும் பார்த்துப் பெருமூச்சு விட்டுப் பிரிவார்கள். அவ்வாறான கைதிகள் வெளியுலகைக் காணும் இறுதிக் கணங்கள் அதுவாக இருக்கும். அதனால் அப்பாலம் பெருமூச்சுப் பாலமென (Ponte dei sospiri) என அழைக்கப்படலாயிற்று என்கிறார்கள்.
- Ponte dei sospiri தொடர்பிலான இவ்விரு படங்களும் இணையத்தில் பெறப்பட்டவை -

வளமும் வாழ்வும் உள்ள இடத்திற்கு போரும் துயரமும் துரத்தி வரும் என்பதற்கு வெனிஸ் மட்டும் விதிவிலக்கல்ல. பன்னாட்டு வல்லரசுகளின் படையெடுப்புக்குள் சிக்கித் திணறியதுதான் அதன் வரலாறு. 16ம் நூற்றாண்டின் பின்னதாக வணிக மையங்களாக, உலகில் புதிய நகரங்கள் முக்கியத்துவம் பெற, செல்வத்தின் சேர்க்கை குறைந்து போன நகரானது வெனிஸ். ஆனாலும் அபாரமான கலைத்திறனால், அதன் ஜீவன் இன்றளவும், சற்றும் குறையாமல் மிளிர்கிறது. இயற்கைப் பேரிடர்களாலும், சூழல் மாற்றங்களினாலும், வருடந்தோறும் மெல்ல மெல்ல நீரில் அமிழ்ந்து கொண்டிருக்கிறது எனும், ஆய்வாளர்களின்  அபாய அறிவிப்புடனே வாழ்கிறது வெனிஸ்.
நீரோட்ட வீதிகளில், படகுகளில் பயணித்து, குறுகலான தெருக்களில் நடந்து, மேம்பாலங்களில் ஏறிக் கடந்து, தண்ணீர் சூழலில் தலை நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்துக் களைத்துப் போய், ஏதாயினும் ஒரு மரத்தடியில் இருந்தால், எங்கோ ஒரு மெல்லிய சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும். ஆளரவம் நிறைந்த சூழலாயினும், அந்த இசையும், கண்களில் தென்படும் காட்சியழகும் தரும் அமைதியில், ஏகாந்தம் காணலாம். அதனால்தான் போலும்,  இன்றளவும் கலாரசிகர்களும், கலைஞர்களும், ஏன் பறவைகளும் கூட,  வெனிஸ் நகர் நோக்கி விரும்பி வருகின்றனர்.
எத்தனை துன்பங்கள் கடந்த வாழ்வாயினும் இன்றளவும் அந்த மக்கள் இயல்பாகவும், அமைதியாகவும், அழகியல் ஆர்வத்துடனும் இருக்கின்றார்கள்.  ஏதோ ஒரு கலைவடிவத்தை அழகியலாகச் செய்யும் விருப்பம் கொண்டவர்களாக, தெரிந்தவர்களாக  இருப்பதுதான் அவர்களின் வாழ்வியல் இரகசியம் என்பது  எனது எண்ணம். அதுவே  அவர்களுக்கும், அங்கு செல்வோர்க்கும்,  வெனிஸ் கற்றுத் தரும் தாரக மந்திரமாகவும் இருக்கலாம்.

சேற்று நிலத்தை, செல்வமும், அழகும் கொளிக்கும் அற்புதபூமியாக மாற்றிய மாமனிதர்களின் வாரிசுகள் தாம் என்பதை, தொடரும் தங்கள் பாராம்பரியங்களுடன் அடையாளப்படுத்தி நிற்கும் அற்புத மனிதர்களாக அவர்கள் வாழும் வரை, தண்ணீரின் மீது கம்பீரம் குறையாத கலைநகராக, "மத்திய தரைக் கடலின் மகாராணி" யாகக் காட்சி தரும் வெனிஸ்.


 

27/09/2018

அம்மா ஜெகதாம்பாள் !


கோவிலில் நீண்ட காலம் பூசை செய்யும் ஐயரை நிறுத்தினால், ஐயர் என்ன செய்யலாம்? புதிய கோவில் தொடங்கலாம் என்பதெல்லாம் சமகாலத் தேர்வுநிலை. ஆனால் முன்னைய காலம் அவ்வாறில்லை. பூஜையும் புரோகிதமும் மட்டுமே தெரிந்திருந்த அந்தணர்களுக்கு வேறு கோவில் தேடிச் செல்வதைத் தவிர வாழ்விற்கு மாற்று  வழியில்லை.  அக் குடும்பங்களின் வலி மிகவும் துயரமானது. அந்தத் துயரத்தை " ஆகுதி " எனும் சிறுகதையில் ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர் அ.சோமகாந்தன் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்.  வாழ்வின் துயருக்குள் தன் குடும்பம் சிக்கி விடக்கூடாதே என்பதற்காக, சிரமங்களையெல்லாம் தாங்கிய வண்ணம், கொத்தடிமைகள் போன்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள் எனும் உண்மையை, " பொற்சிறையில் வாடும் புனிதர்கள் " நாவலில் பதிவு செய்திருக்கின்றார் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் தெனியான். இத்துயர்களை அறிந்த போது என்னுள் எழுந்த  துணிபே " செய்யும் தொழிலே தெய்வம்" எனச் சொல்லி, தெரிந்த வேலை எதையும் செய்யலாமெனும் எண்ணம். அதனாலே பலவற்றையும் ஆர்வமாக கற்கவும் அறியவும் முயன்றேன். அவையெல்லாவற்றுக்குமான அடிப்படை; வாசிப்பு என்பேன். அதை எனக்குச் சிறு வயதிலே அறிமுகப்படுத்தியவள் என் அம்மா ஜெகதாம்பாள் !
அம்மா!
எல்லோர்க்கும் பிடித்தமான, நேசிப்புக்குரிய, ஒரு உறவுமுறை அம்மா. நாம் விரும்பித் தேர்வு செய்யமுடியாத உறவும் கூட. இவ்வுலகினை, உலகின் சிறப்புக்களை, வாழ்வின் பெருமிதங்களை, நாம் காண, களிப்புற வழிசமைத்தவள். பெருமைக்குரிய தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்ததினால், எனக்கும் அந்தப்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அந்தத் தாயுடன் வாழ்ந்த காலத்தின் நீட்சிதான் சொற்பமானது.

என் பத்தாவது வயதில் காலமாகிய  தாயுடனான வாழ்க்கைக் காலத்தில், முதல் ஐந்து வருடங்கள் பால்யப் பருவத்தில் கழிந்துவிட, இறுதி வருடமும் அவளது நோயின் காரணமாகக் குழப்பமாய் அமைந்து விட, நான்கு வருட காலப்பகுதியே அவளைக் கற்கவும், அவளிடமிருந்து கற்கவும் முடிந்தது. ஆனாலும், அவளிடமிருந்து கற்றுக்கொண்ட பலவும் , அவள் பிரிந்து, பல ஆண்டுகள் ஆனபோதும், இன்றுவரை என்னுடன் வாழ்கின்றது, என்னை வாழ்விக்கின்றது. அதில் முக்கியமானது வாசிப்பு.  எவ்வளவு வேலைப்பளுக்கள் இருந்தாலும் தினமும் ஏதோ ஒரு சிறு பகுதியையாவது வாசித்துவிடுகின்றேன்.

அம்மாவைப்பற்றிய அடையாளங்கள் சின்ன வயதில் என்னுள் பதிந்தபோது, சாதாரணமான சம்பவங்களாகத்தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் இப்போது பார்க்கையில்தான் தெரிகிறது அவளின் மாசிலா மாற்றுக்களின் மகத்துவம். அவளின் மறைவின் போது, நாம் அழுததிலும் பார்க்க, தம்பலகாமம் அழுதது என்று சொல்லலாம். அந்தளவுக்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்திருந்தாள். அதற்குக் காரணம், அவளின் மகத்தான மனித நேசிப்பு. நல்லவன், கெட்டவன், குடிகாறன், கோள் சொல்பவன், சின்னவன், பெரியவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், என எந்தப் பாகுபாடுமில்லமால், பேதங்கள் கொள்ளாமல், அனைவரையும் சமமாக மதிக்கத் தெரிந்த மாதரசி.

அன்பு அன்பு அன்பு, அவளுடைய தாரக மந்திரமே அதுதான். அதன் நித்திய ஜெபிப்பால் அவள் பெற்றிருந்த பலம் மிகப்பெரியது. குறுமுனி போன்று உயரத்தில் குறைவான அந்தக் குட்டைப்பெண்மணியின் கேள்விகளுக்குப் பயமும் மரியாதையுமாகப் பதில் சொல்லும் மனிதர்கள் பலர், கடைத்தெருவீதியில் வாய்சொல்வீரர்களாக நிற்பதைப் பாடசாலை செல்லும் வேளைகளில் கண்டு அதிசயித்திருக்கின்றேன். குடிபோதையில் வீட்டுக்குத் திரும்பும் குடிமன்னர்கள், எங்கள் வீட்டு வாசலில் அம்மா நிற்பதைக் கண்டதும், மரியாதை மன்னர்களாகச் செல்லும் பவ்வியம் கண்டிருக்கின்றேன். அப்போது யோசித்ததுண்டு, ஏன் இப்படி எல்லோரும் அம்மாவிடம் பயந்தவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவர்கள் பார்த்துப் பயங்கொள்ளும் முற்கோபியான என் அப்பா கூட, அம்மாவின் வார்த்ததைகளில் அமைதியாகிவிடுவார். இப்போது புரிகிறது, அது அவள் மேலான பயமில்லை, பணிவு என்று. மற்றவர்களைப் பணிய வைக்க அவள் பாவித்த ஒரே ஆயுதம், எல்லோரையும் மிகுதியாக நேசித்ததுதான். நேசிப்பின் வழி நின்ற அவள், அதே நேசிப்பின் வழியாக எட்டிய பரிமானங்கள் மிக மிக உயரமானவை.

ஊருக்குள் ஒரு துயரம் என்றாலோ, மகிழ்ச்சி என்றாலோ, அம்மாவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். யார் யாருக்கு என்ன உதவிகள்தேவை, யார் யாரிடமிருந்து அந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதெல்லாம் அவளுக்கு மட்டுமே தெரியும். அவளால் மட்டுமே முடியும்.

சாதியக்கட்டுமானங்களின் வழிவந்தவளாயினும், சாதியத்தின் வழியில் எவரையும் பார்த்தறியாதவள். அந்த ஜீவநேசிப்பே அவளை அனைவர்பாலும் கவர்ந்திற்று. அதற்காக அவள் பகுத்தறிவுவாதியல்ல. நிறைந்த கடவுள் பக்தியுடையவள்தான். முப்பத்தைந்து வருடங்களின் முன்னமே, பெண்களை அணியாகவும், அமைப்பாகவும், திரட்டி ஆக்கவழியில் வழிநடாத்தினாள். ஆனால் அரசியல்வாதியல்ல. இசையில் வயலினும், இலக்கியத்தில் புத்தகங்களும், வாசிக்கத் தெரிந்தவள். நன்றாகப் பாடவும் செய்வாள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை நாயகனாய் மதிக்கப்படும் சேகுவேராவின் தாய் ஸெலியாவுக்கும், என் தாய்க்கும் ஒற்றுமைகள் இருந்தததை, பின்னாட்களில் சேயின் வரலாற்றை வாசித்தபோதுதான் உணர்ந்தேன். ஸெலியா போன்று வசதிமிக்க நடுத்தரக்குடும்பத்தின் வாரிசு, பரோபகாரி, பெண்களின் துன்பங்களுக்கான மாற்றுச்சிந்தனைகள், ஆஸ்த்மா நோய்யுள்ள மூத்த மகன், எனச்சில ஒற்றுமைகள் தெரிந்தன. ஆனால் அம்மா சேகுவேராவைப் பற்றியோ, ஸெலியாவைப் பற்றியோ, அறிந்திருந்தாளா என்பது தெரியவில்லை.

சிறு வயதில் ஆஸ்த்மா நோயால் மிகவும் துன்பப்பட்ட என்னை, நோயின் கடுமையிலிருந்து ஆற்றுப்படுத்துவதற்காக சேயின் தாய் ஸெலியா போன்றே, என் தாயும், எனக்குக்கற்றுத்தந்தவைகள் ஏராளம். என் ஏழாவது வயதிலேயே வாசிப்பை யாசிக்கக் கற்றுத்தந்தாள். எட்டாவது வயதில் எழுதும் வகை சொல்லித்தந்தாள். ஒன்பதாவது வயதில் வானொலி கேட்கப்பழக்கினாள். அந்தப்பழக்கத்தில் அறிமுகமான நிகழ்ச்சிதான் வானொலி மாமா நடாத்திய '' சிறுவர் மலர் '' நிகழ்ச்சி. சனியோ, ஞாயிறோ மதியம் பன்னிரெண்டு மணிக்கு இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. அப்போது வானொலி மாமாவாக இருந்தவர், நா.மகேசன். மிக அருமையான குழந்தைகளுக்கான கலைஞர்.

அம்மாவின் வழிகாட்டலில் என் முதலாவது எழுத்து சிறுவர் மலருக்காக எழுதப்பட்டது. அம்புலி மாமா சிறுவர் புத்தகத்தில் வந்த ஒரு கதையைத் தழுவலாகக் கொண்டு, 'எலிப்படை' என்ற வானொலி நாடகம்தான் எனது முதலாவது ஆக்கம். அதை மேலும் மெருபடுத்தி அழகியதொரு வானொலி நாடகமாக வானலைகளில் வானொலி மாமா ஒலிக்கவிட்டிருந்தபோது, எனக்கு வயது பத்து. என்பக்கதிலிருந்து அந்நாடகத்தைக் கேட்டுமகிழ அப்போது என் தாய் உயிரோடில்லை. அதை என் அருகிருந்து இரசித்துக் கேட்டு மகிழ்ந்தவர் என் சிறிய மாமா இராமசாமி சர்மா. என் படைப்புக்கள் எதையும் அவள் பார்க்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எனைப் பாதித்த என் தாயும், அவள் தந்த வாசிப்பினால் பதிந்த சேயும், என் எண்ணங்களில், செயல்களில், இன்னமும் இணைந்தே வருகின்றார்கள்.

ஒரு குடும்பத்தில்  நிகழும் மங்கல நிகழ்வுகள் திட்டமிட்டு நிகழ்பவை. அதற்கான வளங்கள் அனைத்தும் படிமுறையாகச் சேகரிக்கப்படும். ஆனால் அமங்கலமான  மரணம் எதிர்பாரமல் சம்பவிக்கையில், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போகும். அப்போது அக் குடும்பத்திற்கான உதவி வழங்கல் குறித்து, சென்ற வாரத்தில்,  தம்பியொருவன் சமூகவலைத்தளத்தில், மாற்றி யோசிப்போம் என  ஒரு பதிவிட்டிருந்தான். நியாயமானதும் தேவையானதுமான சிந்தனையது.

இன்றைக்கு 50 வருடங்களின் முன்னரே அந்த மாற்று யோசனையைச்  செயலாக நெறிப்படுந்தியிருந்தார்கள் என் தாயும் அவள் தோழிகளும் என்பது ஆச்சர்யமான உண்மை . அம்மாவின் தலைமையில் ஒரு மாதரணி தம்பலகாமத்தில் இயங்கியது. பிரதோஷ விரதகாலங்களிலும், ஏனைய சிவ விரதங்களின் போதும், கோவிலில் பஜனை செய்வதாக, ஒரு சிவராத்தி நாளில்  ஒன்று சேர்ந்த இந்த அணியினர், சமூகத்திற்காக ஏதேனும் செய்ய எண்ணிய போது உருவானதுதான் அத் திட்டம். ஒரு தொகைப் பணத்தினை சேகரிப்பாக சேமித்துக் கொண்டார்கள்.

ஒரு வீட்டில் துயர் நடந்தால், அவ் வீட்டின் பக்கத்து வீடுவரைக்கும் அம்மா சென்றுவிடுவாள். அங்கிருந்து துயர்வீட்டின் உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசி, ஆகவேண்டிய செலவினங்களுக்கான உதவிகளை, தங்கள் சேகரிப்பிலிருந்து கொடுத்து, ஆறுதல் சொல்லி வருவாள். வீடு திரும்பியதும் நேரே கிணற்றடிக்குச் சென்று தலை முழுகிய பின், துயரவீட்டிற்கான உணவுத் தேவைகளுக்கான சமையல்களைச் செய்து,  உதவி செய்யக் கூடியவர்கள் மூலமாக அவற்றினைக் கொடுத்து அனுப்பவும் செய்வாள். துயரத்திலிருந்து அக் குடும்பம் மீண்டதன் பின்னதாக, செலவுக்குக் கொடுத்த தொகையினை, மாதாந்திரமாகத் திருப்பிச் செலுத்தும் வகையினை ஏற்படுத்துவாள். இதற்கு அவளுக்குப் பெருந்துணையாக இருந்தவர், என் பள்ளித் தோழி கௌசலா தேவி ரகுராமனின் தாயார் பாக்கியம் அக்கா.

இன்று நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது அரை நூற்றாண்டுகளுக்கு முன், அம் மாதரசிகள் எவ்வாறு சிந்தனையோடு செயற்பட்டிருக்கின்றார்கள் என்று. இந்த விடயம் அப்போது வீரகேசரி பத்திரிகையில் செய்தியாகவும் வந்திருந்தது. அதன் வெட்டுப் பிரதியும் என்னிடம் நீண்டகாலமாக இருந்தது.

அம்மாவின் தைரியம் குறித்து அம்மம்மா  ஒரு சம்பவம் சொல்வார்.  அம்மாவின் தந்தையார் இளவயதில் மறைந்துவிட, அம்மாவையும் , அவரது தம்பியும், எமது தாய்மாமானாருமாகிய இரத்தினசபாபதிக்குருக்களையும், ஆதரித்து வளர்த்தவர் அவர்களது பேரனார் சின்னையர். அவர் அனலைதீவில் காலமானபோது, எனது பெற்றோர்கள் அனலைதீவுக்கு வெளியே இருந்திருக்கிறார்கள். மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் வரும்போது, சின்னையரின் பூதவுடல் மையானம் சென்றுவிட்டது. ஆனால் அம்மா அவரின் முகத்தை தான் இறுதியாகப் பார்க்க வேண்டும் என பிடிவாதமாக மயானம் சென்று பார்த்தார் என அம்மம்மா சொல்வார்கள். அந் நாட்களில் பெண்கள் மையானம் செல்வதென்பது இல்லாத மரபு.

" மரபுக்குள் நின்று மரபை மீறல் " யுக்தி  உங்களுக்கு நன்கு தெரிகிறதென, என் செயற்பாடுகளுக்கான விமரிசனமாக,  அன்பிற்கினிய நண்பரும், ஆய்வாளருமான பற்றிமாகரன் கூறுவார். உண்மையில் அந்த வித்தையை அறிந்து கொண்டது என் தாயிடமிருந்துதான்.  புத்தகங்களை வாசி, ஆனால் புத்தகப்பூச்சியாக வாழ்ந்து விடாதேயென அறிவுறுத்தியவள் அம்மா. அறிந்து கொள்ளல், அனுபவங்களை உணர்ந்து செல்லல், என வாழ்க்கையை வாழ்ந்து செல்ல, அகரம் சொல்லித் தந்தவள் அம்மா.


அம்மாவின் இஷ்ட தெய்வம் அனலைதீவு சங்கரநாத மகா கணபதிப் பிள்ளையார். அம்மாவின் இறுதி மூச்சு பிரிகின்ற வேளையிலும், அவர் கூறியது பிள்ளையாரின் திருநாமம்தான். அம்மாவின் அந்தப் பிரார்த்தனையின் பிரார்த்துவம்தான் இன்று என் வாழ்வில் தொடர்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் எனக்கும், அப்பாவிற்கும், எங்கள் குடும்பத்தில் எல்லோர்க்கும் சிவன் பார்வதி மீதான பற்றுதலே அதிகம். அப்பாவின் வாழ்க்கைக் காலத்தில் அதிகம் பூஜை செய்ததும் சிவனுக்குத்தான். ஆனால் இந்தத் துறைக்குள் வரவே கூடாது என திடமான எண்ணம் கொண்டிருந்த என்னை, ஏதோ ஒன்று இழுத்து வந்து, தொடர்ச்சியாக  விநாயக வழிபாடு செய்விக்கிறது. தம்பலகாமத்தின் வில்வமரத்தடிப் பிள்ளையாரில் தொடங்கி, கிண்ணியா ஊற்றங்கரைப் பிள்ளையார், சுவிற்சர்லாந்தில் கூர் நவசக்தி விநாயகர், இத்தாலியில்  ஜெனோவா சித்தி விநாயகர்,  நாப்போலி விநாயகர் எனத் தொடரும் இறைபணியில், அம்மாவின் அருளாசியும், ஆத்ம தர்சனமும் மிகுந்திருப்பதாக நம்புகின்றேன்.

அம்மாவின் மறைவின் போது ஏதுமறியாதவனாக இருந்த எனக்கு இழப்பின் பயம் மட்டுமே இருந்தது. ஆனால் அம்மாவின் இழப்பின் வலி புரிந்து நான் கண்ணீர் விடுகையில் எனக்கு வயது முப்பது. அடுத்த வருடம் எமக்கு மகள் பிறந்தாள்.....


20/09/2018

திரு நாகேஸ்வரம் ( பிறந்த மண் )

- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு) வான் தோற்றம் -
படம்: நன்றி : Pulendran Sulaxshan
பிறந்தமண் என்பது எல்லோர்க்கும் பிடித்தமானது. அதன் பெருமையைப் பேசுதல்,  மகிழ்ச்சியில் திளைத்தல் என்பது அதனிலும் மேலானது. தம்பலகாமம் குறித்து நாம் அதிகம் பேசுவதாலும், எழுதுவதாலும், அதிகம் சந்தித்த கேள்விகளில் ஒன்று " நீங்கள் தம்பலகாமமா.. திருகோணமலையா?". தம்பலகாமம் நாம் வளர்ந்த மண். பற்றும், படிப்பறிவும், வாழ்வும் தந்த மண். எமது தந்தையாரை, ராசா ஐயா என்றும், உறவுகள் மத்தியில் தம்பலகாமம் ராசா என்றும் அழைப்பது வழக்கம். அந்தளவிற்கு தம்பலகாமத்தின் அடையாளம் எங்கள் வாழ்வோடு ஒட்டியிருந்தது. அப்பாவின் இயற்பெயர்  நாகேஸ்வரன்.   எங்கள் குடும்பத்தின் ஏழாந் தலைமுறை, பரன் ஸ்தாபித்த சிவனின் திருநாமம். உலகெலாம் உணர்ந்து ஓதுதற்குரியவன்,  ஒரு புற்றினடியில், நாகேஸ்வரனாகக் கோவில் கொண்டு, நல்லருள் பாலிக்கும் ஈழத்தில் நாகவழிபாட்டின் தொன்மைத் தலங்களில் ஒன்றான  திரு நாகேஸ்வரம் எமதுபிறந்த மண்.

ஈழத்தில் திருநாகேஸ்வரமா..? அது எங்கே இருக்கிறது ?அறியலாம் வாருங்கள்.....

- தாமோதர ஐயர் ஸ்தாபித்த மூலவர் -
 கடல் மார்க்கமாக தேசாந்திரியாகப் புறப்பட்ட, தாமோதர ஐயர் எனும் வேத பண்டிதர். தமிழகத்திலிருந்து  தான் எடுத்து வந்திருந்த தெய்வச் சிலைகளில் விநாயகரை, சங்கரநாத மகா கணபதியாக ஸ்தாபிக்கின்றார்.   புளியந்தீவு எனும் சிறு தீவில், தன்னிடமிருந்த சிவனை, நாகேஸ்வரனாகப் பிரதிஷ்டை செய்கின்றார். தொன்மைத் தமிழர் வழிபாடுகளில் ஒன்றான நாகவழிபாட்டினை, அத்தீவின் மக்கள் மேற்கொண்ட புளியந்தீவே ஈழத்தின் திரு நாகேஸ்வரம் .

 -  அரசின் மரத்தின் கீழ் காட்சிதரும் மணிபல்லவகாலத்து விக்கிரகம் -

பரம்பரை பரம்பரையாக என்று நாம்  சொல்லும் உறவு முறை வரிசையில், தந்தை+தாய், பாட்டன் + பாட்டி, பூட்டன் + பூட்டி, ஓட்டன் + ஓட்டி, சேயோன் + சேயோள், பரன் + பரை - எனும் ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த, இராமேஸ்வரத்து வேத பண்டிதரான, தாமோதர ஐயர், ஸ்தாபித்த நாகேஸ்வரனின் பெயர் என் தந்தையாருக்கும், ஸ்தாபித்த தாமோதர ஐயர் பெயர் என் சிறிய தந்தையாருக்கும் சூட்டப்பெற்றதாகக், குலப் பெரியவர்கள் சொல்வார்கள். பின்னாளில், வேதாகம சமஸ்கிருத பண்டிதராக பாண்டித்தியம் பெற்று, இலங்கை , இந்து கலாச்சார அமைச்சினால் மொறிசியஸ் நாட்டிற்குச் சென்று, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இநத் சமய வளர்ச்சிகான அரும்பணிகளை ஆற்றிவருபவர், ஏழாவது தலைமுறையில் வரும் மற்றொரு சிறிய தந்தையார். சிவஶ்ரீ. பாலசுப்ரமணியக் குருக்கள்.

 தாமோதர ஐயர் - பரன், கார்த்திகேசு ஐயர் - சேயோன், கதிரேசு ஐயர் - ஓட்டன், முத்தையர் - பூட்டன்,  சின்னையர் - பாட்டன், நடராஜக் குருக்கள் - தந்தை,  நாகேஸ்வரக் குருக்கள் எமது குடும்பத்தின் ஏழாந்தலைமுறை.

இலங்கையின் பூர்வீக தமிழ்மக்கள் நாக வழிபாடியற்றினார்கள் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவை தொடர்பில் பல்வேறு செவிவழிக்கதைகளும் உள்ளன. இங்கே நாம் பதிவு செய்வது, இத்தீவின் மக்களிடையே செவிவழிக் கதையாகப்பரவி, ஆழமான நம்பிக்கையாக உறைந்துவிட்ட ஒரு பண்பாட்டுக்கோலம்.

முன்னொருகால் இத்தீவுக் கூட்டங்களின் வணிகர் ஒருவர் வர்த்தக நோக்கில், "வத்தை"  என்று சொல்லப்படும்,  பொதிகள் ஏற்றும் பாய்மரச் சரக்குப்படகில், பயனித்தபோது, கடலின் நடுவில் தெரிந்த பாறையொன்றில், கருடன் ஒன்று இருந்து ஆர்பரிப்பதைக் கண்டிருக்கிறார். அவர் தன் படகினை கருடன் இருந்த பாறையை அண்மித்ததாகச் செலுத்த கருடன் மேலெழுந்து பறந்துவிட்டது. கருடன் இருந் பாறைக்கு எதிராக இருந்த மற்றொரு பாறையின் இடுக்கில் ( இன்றும் இக்கடற்பகுதியிலுள்ள இவ் இருபாறைகளையும், கருடன் குந்திய பாறை, அரவம் சுற்றிய பாறை என்றே அடையாளங்காட்டுகின்றார்கள்.) மறைந்திருந்த ஒரு நாகம் வெளிப்பட்டு, மணிபல்லவம் என்றழைக்கப்பட்ட, நயினாதீவை நோக்கி நீந்துகிறது. அப்போதுதான் அந்த அதிசயத்தை அவர் கண்டார். நீந்துகின்ற பாம்பின் வாய்பகுதியில் பூ ஒன்று தென்படுகிறது. இந்த அதிசயம் கண்ட, ஆச்சரியத்தோடு தன் அன்றாடவேலைகளுக்குள் மூழ்கிவிட்ட வர்த்தகர், அன்றைய பொழுதினை நிறைவு செய்து தூக்கத்திற்குச் சென்று விட்டார். தூக்கத்திலிருந்த வர்த்தகரின் கனவில் தோன்றிய அம்பாள், நயினாதீவில், குறிப்பிட்ட இடத்தில், தான் சுயம்புவாகத் தோன்றியிருப்பதாகவும், தனக்கு ஆலயம் அமைக்கும்படிகோரியதாகவும், அதன்பின் வர்த்தகர் ஊர்மக்களிடம் இக்கனவைக் கூறி, ஆலயம் அமைத்ததாகவும், அந்த ஆலயமே இன்று பிரசித்தி பெற்று விளங்கும் நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலயமெனவும் அறியப்படுகிறது.

- நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் -
நயினாதீவு நாகபூசணியம்மனை அறிந்தவர்கள் பலரும் அறியாத கதையும், தெரியாத கோவிலும், திருநாகேஸ்வரம்.  சுயம்புவாக எழுந்த அம்மனின் தலைமேலே , அனுதினமும், அன்றலர்ந்த மலர் ஒன்றிருப்பதைக் கவனித்த அடியவர்கள்,  இது எவ்விதம் வருகின்றதென ஆச்சரியமுற்றவேளையில், நயினாதீவிற்கு அண்மித்துள்ள மற்றொரு தீவான அனலைதீவின் தென்கரையிலிருந்து,  ஒரு நாகம் பூவோடு கடலில் நீந்தி வந்து ஆலயத்துள் செல்வதைக் கண்டிருக்கின்றார்கள். அனலைதீவின் தென்பகுதிக்கரையில் அமைந்திருக்கும் சிறு தீவு புளியந்தீவு.

இப்புளியந்தீவில் கோவில் கொண்ட பெருமானார், இராமேஸ்வரத்திலிருந்து வந்த தாமோதர ஐயர் ஸ்தாபித்த நாகேஸ்வரன். இக்கோவிலின் வழிபாட்டு மூலம், ஆலயபிரகாரத்திலுள்ள அரச மரமும் வேப்பமரமும், இணைந்திருக்கும் இடத்திலமைந்த புற்றிலுள்ள நாகத்தினை வழிபாடு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இப்புற்றிலுள்ள நாகமே தினந்தோறும் நயினாதீவிலுள்ள அம்மனைப் பூக்கொண்டு வழிபாடியற்றி வந்தது என்பது மக்கள் நம்பிக்கை. அதனாலேதான் நயினை அம்மனுக்கு நாகபூசணி எனும் திருநாமம்  வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா..? என்றெழும் கேள்விகளை விஞ்சி நிற்கிறது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. அது அவர்களை வாழ்விக்கிறது.

- திரு நாகேஸ்வரம் ( புளியந்தீவு - அனலைதீவு)  -
                                                                     படம்: நன்றி : Pulendran Sulaxshan

இந் நம்பிக்கை தொடர்பாக  ஒரு சுவையான அனுபவமும், கதையும் எமக்கும் உண்டு.

80களின் நடுப்பகுதிகளில், எமக்கு மகன் பிறந்து ஒரு வருடமாகியிருந்த வேளையில், எமது பரம்பரையினர் தொடர்புபட்டிருந்த இக்கோயிலுக்கு மனைவி பிள்ளையுடன் சென்று வருமாறு எம் பெற்றோர்கள் கூறினார்கள். உள்நாட்டுப் போர் நடந்த அன்றைய சூழலில்,  சமாதான காலமாக அமைந்திருந்த தருணமொன்றில்,  மனைவி பிள்ளையுடன் அக்கோவிலுக்குச் சென்றோம். அங்கே நின்ற ஊர்மக்கள் எம்மை யாரென்று அறிந்துகொண்டதின் பின் அக் கோயில்பற்றியும், அங்கே புற்றிலுள்ள நாகம் பற்றியும், கதை கதையாகச் சொன்னார்கள். சொல்லும்போது ஒன்றைக்கவனித்தேன். அவர்கள் நாகத்தை பாம்பு என அஃறினையில் குறிப்பிடவில்லை. '' பெரியவர் இப்ப ஆச்சியிட்ட (நயினை நாகபூசணி கோவிலுக்கு) போயிருப்பார். உமக்குப் பலனிருந்தா காணலாம் '' என உயர்திணையில் நாகத்தை விழித்துக் கதைத்தார்கள். ''சரி எப்பவோ நடந்திருந்தாலும், இப்பவும் அப்பிடி நடக்குமா? அந்தப்பாம்புதான் உயிரோட இருக்குமா? '' எனக்கேட்ட என்னை ஒரு விசமத்தனமான சிரிப்போடு பார்த்தார்கள்.

- சிவனும் சக்தியுமாக இனைந்த அரசும் வேம்பும் -
சண்முகம் என்ற பெரியர் சொன்னார். '' நீர் நம்பையில்லைப்போலும். ஆனா அன்றைக்கு அம்மனுக்கு பூக்கொண்டுபோன அதே பெரியவர் இன்னமும் இங்கதான் இருக்கிறார். தினசரி அம்மனிட்ட அவர் போய்த்தான் வாறார்..'' அவர் அப்படிக் கதைத்துக் கொண்டிருந்தபோது, நான் அந்தமரத்தடியையும், புற்றினையும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் கால்களை உரசியவாறு, குருவிபோன்ற ஏதோ ஒன்று புற்றுக்குள் வேகமாகச் சென்று மறைந்தது. எதிர்பாராத இந்த சம்பவத்தில் நான் நிலைகுலைந்து  தடுமாறினேன். பக்கத்தில் நின்ற மணியம் எனும் கோவில் பணியாளர்,  ''பார்த்தீரே கண்ணுக்கு முன்னால் வந்து தன்ன காட்டியிருக்கிறார் பெரியவர். இனியும் நம்பமாட்டீரோ? '' எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது வாயடைத்து நின்றேன்.

 - புற்றுறைப் பெருமானாக புளியந்தீவான் -
அருகே வந்த பெரியவர் சண்முகம், எம் தோள் தொட்டுத் தழுவி,  " நீ பிறந்ததே இந்தப் பெருமானின் பேரருளால்தான்.." எனத் தொடங்கி, என் பிறப்பின் கதை சொன்னார்.

" பாம்பிற்கு பால் வைக்காதே என எச்சரிப்பவர்கள் உண்டு. ஆனால் எங்கள் ஊரில் பால் வைத்து  வழிபடு. பாலகன் பிறப்பான்.. " என்பது பெரியோர் மறை வாக்கு. ஆன்றோர் வாக்குக்  கேட்டு, நீண்ட நாட்களாக குழந்தையற்றிருந்த என் தாய், புளியந்தீவு புற்றிலுறை அரவத்துக்கு, தினமும் காலை பால் வைத்து வழிபட்டார். அவ்வாறு அவர் வைக்கும் பாலை, அரவு குடிப்பதைக் கண்டிருந்த அவ்வூர் மக்கள், " அம்மா கலங்காதிரு. நாகேஸ்வரன் அருள்வார்.." என நம்பிக்கையூட்டியுள்ளார்கள். நம்பிக்கை பொய்க்காது நானும் பிறந்தேன்.

-  உறவோடு -
மூளாய் வைத்தியசாலையில் பிறந்த என்னைப் புளியந்தீவுக்கு கைக்குழந்தையாக எடுத்துச் செல்கையில், அதே தோணியில் அழகான ஒரு சர்ப்ப வாகனத்தையும் எடுத்துச்சென்று, புளியந்தீவு நாகேஸ்வரனுக்கு அர்ப்பணித்ததாக என் தாய்மாமன் சொல்வார். மிக ஆடம்பரமாக திருப்பணிசெய்த, புதிய கோவில் தேவையில்லையென, அரசமரத்தின் புற்றிலுறை அரவப்பெருமானகவே இன்றும் அருள்தருகின்றார். மூலவராக நாகேஸ்வரன் விளங்கும் இவ் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானின் திருக்கோலம் அலாதியான அழகுமிக்கது.

புளியந்தீவு எனுந் திரு நாகேஸ்வரத்தில், இதுவரை யாரையும் அரவு தீண்டியதில்லை என்பார்கள். அதே போல் அந்த ஆலயத்தைச் சூழவும் உள்ள தென்னந் தோப்புக்களில், விழுந்து கிடக்கும் தேங்காய்கள் உட்பட எப் பொருளையும் யாரும் தொடுவது கூட இல்லை. அவை அனைத்தும் நாகேஸ்வருனுக்கானது என்பது அவ்வூர் மரபு.

- உயிர் தந்தோன் பதம் போற்றி -
தருணம் வாய்க்கும் போதெல்லாம்  சென்று தரிசித்து வருகின்றேன். சென்று திரும்பும் போதெல்லாம் தாயின் மடியில், தந்தையின் தோளில், தலைசாய்த்திருந்த சுகம். செல்லும் போதெல்லாம் எம்மைப்பூஜை செய்ய வைத்து மகிழும், தற்போதைய ஆலய குரு நாராயணன் குருக்களின் அன்பும் அளவிடற்பாலது.

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், நாகதோஷத்திற்குட்பட்டதாக அறியப்பட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லதொரு நாகதோஷ பரிகாரத் தலம் புளியந்தீவு திருநாகேஸ்வரம். நயினாதீவு நாகபூசணியைத் தரிசிப்பவர்கள், அருகேயுள்ள புளியந்தீவு நாகேஸ்வரனையும் சென்று தரிசிப்பது நலமும், பலனும் தரும். எந்தப் பிரபலங்களுமின்றி, இயற்கையோடு இணைந்த சூழலில் அமைந்த இத் திருத்தலத்தின் தீர்தம் சர்வரோக நிவாரணி என நம்பப்படுகிறது.

- அரசின்கீழே, அரவின் மேலே ஆடலரசன் -
சொந்த அனுபவத்தில், மனிவாசகருக்கு வாய்த்த திருப்பெருந்துறை போல் என்னை ஆட்கொண்டது புளியந்தீவு திரு நாகேஸ்வரம் எனும் அத் திருத்தலம்.  அதனால் சொல்வேன், ஒரு முறையல்ல இருமுறை பிறந்தேன் திரு நாகேஸ்வரத்தில்.
--------------------------------------------------------------------------------------------------------------------
- முன்னாள் பதிவாளர் நாயகமும், எமது மற்றுமொரு சிறிய தந்தையாருமாகிய நடராஜக் குருக்கள் சதாசிவ ஐயர், இப் பதிவினை நாம் வெளியிட்ட ஒரு சிலமணித்துளிகளிலேயே இப்பதிவில் முக்கிய திருத்தம் ஒன்று செய்யப்பட வேண்டிதைச் சுட்டிக் காட்டினார். வராலாறு  திரிபு படுத்தப்பட்டுவிடக் கூடாது எனும் அக்கறையோடு அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு மேலதிக இணைப்பாகச் சேர்த்துள்ளோம்.  அது மேலும் ஒரு சுவையான கதையாகவும், முக்கிய தகவலாகவும் அமைகிறது . -

தமிழின் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்  மணிபல்லவம் எனக் குறிப்பிடப்படும் நயினாதீவில் இருந்த கோவில் தொடர்பிலுள்ள புராதன கதையொன்றில், மணிபல்லவக் கோவிலின் கர்பக்கிரகத்தில் இருந்த சிவன் பார்வதி சிலைகள், அந்நியர் அழிப்பின் போது தாக்கப்பட, ஆலயத்தில் இருந்த பக்தர்கள் அவற்றினை திக்கொன்றாக எடுத்துச் சென்று பாதுகாத்தார்கள். அவ்வாறு பாது காத்த சிவனின் திருவுருவமே புளியந்தீவு நாகேஸ்வரன் கோவிலின் புராதன விக்கிரகம். பிரிந்திருந்த சிவனாரே நீளரவாக நீலக் கடல்தாண்டி, பூவோடு  நாகபூசணியிடம் சென்றார் எனவும் கர்ணபரம்பரை கதைகள் உண்டு.
 
பின்னாட்களில் நாகேஸ்வரனைப் பூஜித்த தாமோதர ஜயர், தவறுதலாக சிவனின் விக்கிரகத்தில் ஏற்பட்ட பின்னம் காரணமாக  மனமுடைந்து தேசாந்தரம் புறப்பட்டார் எனவும், அவ்வாறு சென்றவருக்கு தமிழகத்தில் , சிவாச்சாரியார் ஒருவர் ஆறுதலும், அறிவுரையும், சொல்லி வழங்கிய, விநாயகர், சிவன் திருவுருவங்களுடன் மறுபடியும் அனலைதீவு வந்து அவ்விக்கிரகங்களை முறையே அனலைதீவிலும், புளியந்தீவிலும், பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய வருகிறது. இதன் பிரகாரம்,நயினாதீவு நாகபூசணியம்மன் மூலவிக்கிரகமும், புளியந்தீவு நாகேஸ்வன் விக்கிரகமும் மணிபல்லவக் காலத்திற்குரியவை என்னும் வரலாற்று முக்கியத்துவம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது.

இக் கோவிலின் மூல விக்கிரகம் தொடர்பில் சிறிய தந்தையார்  குறிப்பிட்ட கருத்திற்கு இணையான தகவலை, தற்போதைய ஆலயகுரு நாராயணன் குருக்களும் தொடர்பு கொண்டு  தெரிவித்தார்கள். அவர்கள் இருவரது கருத்துக்களின்படி, படக் குறிப்புக்களிலும் மாற்றம் செய்துள்ளோம்.

 இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள். 

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...