06/11/2019

கொலுசியம் என்னும் (கொலை) அரங்கம்


இத்தாலியின் தலைநகரம் ரோம். கலைத்துவம், நாகரீகம், தீரம் நிறைந்த ரோமப் பேரரசின் தலைநகரம்.  வீழ்ச்சியுற்ற ரோம சாம்ராச்சியத்தின் எச்சங்கள் சுமந்த கலைத்துவ நகராகவே இப்போதும் காட்சி தருகிறது. பார்பதற்கும் ரசிப்பதற்கும் பலவிடங்கள் உள்ளன. இந்தப் பத்தியில் நாம் பார்ப்பது கொலுசியம் என்னும் (கொலை) அரங்கம் பற்றியது.  2006 ம் ஆண்டில், இணையத்தில் நாம் எழுதிய கட்டுரையின் மீள் பதிவு இது. ஆயினும், மேலும் சில தகவல்களுடனும், படங்களுடனும், புதிய படையலாக உங்கள் முன்.

சரித்திரங்களைப் பாடமாகப் படித்திருந்த காலத்தில், " வெள்ளையர்" எனின் மாசற்றவர் எனும் பொதுப்புத்தி மனதுள் நிறைந்திருந்தது. அறிவார்ந்து சிந்திக்கத் தொடங்கிய போது அந்த எண்ணம் மெல்ல மாறியது. புலம்பெயர் வாழ்க்கையின் அனுபவ தரிசனங்கள், எங்கள் நிலங்களுக்கு எஜமானர்களாக வந்து கோலோச்சியவர்கள் ஒன்றும் கோமகன்கள் இல்லை, கடற்கொள்ளையர்களாகவும், அடியாட்களாகவும், வாழ்ந்தவர்களின் வாரிசுகள்தான் எனும் உண்மை உறைத்தது.

ஏறக்குறைய இறப்பு நிலைக்கு வந்துவிட்ட ஒரு நோயாளி, யாரோ ஒருத்தர் வருகைக்கான கனங்களைக் கழிக்கும் நிலையிலிருந்த போதும், தன வாழ்வின் எழுச்சிமிகு நிலைகளை எண்ணிப்பார்த்து  ஏங்குவது போலிருந்ததது அந்தப் பெரும் அரங்கைப் பார்க்கையில்.
Coliseum என்பதற்கு அகாராதியில் பேரரங்கம் எனப் பொருள் வந்தது.  லத்தீன் மொழியில் கோலோசியத்தின் பெயர் ஆம்பிபிடியம் ஃப்ளாவியம் (Amphitheatrum Flavium), ஆங்கில மொழி உலகில் வலுப்பெற, அது ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் (Flavian Amphitheatre) என ஆங்கிலமயமானது. அகண்ட பெரும் ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஆடம்பர களியரங்கு, ஆனால் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளுக்கு அது கிலியரங்கு. உண்மையில் அது ஒரு கொலை அரங்கு.
வாகனத்தைவிட்டு இறங்கியதுமே, வான்முட்ட உயர்ந்து நிற்கும் அந்த கலையரங்கின் பிரமாண்டம் உசுப்பியது. உள்ளே நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த போது, இந்த பிரமாண்டத்தை எந்தக் கோணத்தில்  முழுமையாக  பதிவு செய்யலாம் என எண்ணத் தோன்றியது. அழிந்து போன நிலையில் இருந்த போதும், ஒவ்வொரு புறமும் ஏதோ ஒருவித அழகைக் கொட்டிவைத்த வண்ணமேயிருக்கிறது.
 
அம்ஃபிதியேட்டர் (amphitheatre)  எனும் கட்டிட வகையிலான இந்த  அரங்கின் வட்டவடிவிலான அமைப்பினை ஒட்டியே, லத்தீன மொழியில் இதற்கு கொலோசியம் என்ற பெயர் வந்ததாகச் சொல;கிறார்கள். ரோம் நகர் தீப்பிடித்து எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் குறித்து அறிந்திருப்போம். அவனது உருவச்சிலை ஒன்றின் பெயரில் இருந்து கோலோஸ்ஸியம் என இது அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  நீரோ மன்னனின் ஆட்சியைத் தொடர்ந்து வந்த, ஃப்ளாவியன் வம்சப் பேரரசர்களால் கட்டப்பட்டது இக் கலை அரங்கு.  ஒரே தடவையில் 65 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடியதான பரப்பு விஸ்தீரனமானது.
சும்மா சுற்றிப்பார்த்து வருகையிலேயே அரைநாட்பொழுதினை அப்படியே பறித்தெடுத்து விடுகிறது அந்தப் பிரமாண்டம். சந்தேகமில்லை, கலையின் நயம் தெரிந்தவர்களும், நயக்கத்தெரிந்தவர்களும் இணைந்த இணைவில் பிறந்திருக்கிறது அந்தக் கலையரங்கு. கலைகளின் வரைபுயர்வில், நாகரீக உச்சம் தொட்ட இனத்தவர்களாக வாழ்ந்தவர்கள் பட்டியலில் அடங்குபவர்கள் ரோமானியர்கள். இருந்தென்ன, மனித மான்பு மறந்து, சகமனிதனின் வலியை, சாவை, குரலெழுப்பி ரசித்து, கொண்டாடியிருப்பதை அறியும்போது, 'அடப்பாவிகளா' என அரற்றிவிடுகிறோம்.


ரோமப் பேரரசன் வெஸ்பாசியன் (Vespasian) ஆட்சிக்காலமான கி.பி 72 ஆம் ஆண்டில், கட்டத் தொடங்கிய இந்த அரங்கம்,  அவனது அவன் மகன் டைட்டஸ்  ஆட்சியில், கி.பி 80 ஆம் ஆண்டு  நிறைவு பெற்றது.  சுமார் நூற்றைம்பது அடி உயரம் கொண்ட இந்த வட்ட அரங்கத்தில், நான்கு கலரிகள் உள்ளன.[ முதலாவது கலரி அரச குடும்பத்தினருக்கும், இரண்டாம் கலரி  நிலப்பிரபுக்கள் மற்றும் பிரதானிகளுக்கானது. மூன்றாம் கலரி தொழிலாளர்களுக்கும், நான்காம் கலரி பெண்களுக்குமாகக் கட்டப்பட்டவை. அடித்தளத்தில், அடிமைகள் சிறைக் கூடமும்,  கொடிய விலங்குகளின் கூண்டுகளும், ஆயதக் களஞ்சியங்களும் இருந்திருக்கின்றன.

மிருகங்கள் வளர்க்கப்பட்ட கூடுகள், மிருகங்களாய் அடைக்கப்பட்ட மனிதர்களின் குறுங்கூடங்கள், அடித்தளத்தில். அதன் மேலாக ஆடுதளம், அல்லது கொலைக்களம். அதற்காப்பால் விரிந்துயரும், விருந்தினர், பார்வையாளர், அமர்தளங்கள். அனைத்தையும் அழகியகலை நயத்துடனும், அதிநுட்பத் தொழிற்திறனுடனும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக , எண்ணிட முடியா இடாம்பீகத்துடனும், கட்டிமுடித்து, கலை ரசிக்காது கொலை ரசித்திருக்கிறார்கள்.


எதிரிகள், கைதிகள், குற்றவாளிகள் என வகைபிரித்து  அடைத்து வைத்திருந்த மனிதர்களை, கிளாடியேட்டர்கள் என அழைத்து, கத்திகள், கோடாரி, கேடையம், வீச்சரிவாள்,  இரும்புக் குண்டு ஆகியவற்றைக் கொடுத்து மனிதனை மனிதன் தாக்கிக் கொல்வது, மனிதனை மிருகத்துடன் சண்டையிட வைத்துக் கொல்வது, என வகைவகையாய் வதைகள் செய்வதை, ஊர்கூடி ஒய்யாரமாக ரசித்திருக்கிறார்கள்.


' ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளையொக்கும் ' எனத் தமிழில் ஒரு முதுமொழியுண்டு. இடிந்து போய்கிடக்கும் ரோமானியச் சிதிலங்களைப் பார்க்கும்போது, கலையரங்கில் கதறியழுத ஒவ்வொருத்தன் கண்ணீரும், தங்கள் இராச்சியங்களின் காரைகளை பெயர்த்தெடுக்குமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள் சக்கரவர்த்திகள்.

பாதாளச்சிறைகளின் நிலங்களில் இப்போ பசும்புல் முளைத்திருந்தாலும், பார்வையாளர் பலர் தினமும் பார்த்து ரசித்துப் போனாலும், உள்ளிருந்து வெளிவருகையில், எங்கோ ஓர் மூலையில் யாரோ அழும் ஓலம் சன்னமாய், அவலமாய், கேட்பது பிரமை. இலேசாக நடுங்குகிறது சரீரம். ஜெபமும் சபிப்பும் ஒன்றையொன்று துரத்திப்பிடித்து விளையாடுகிறது.

 
எதுவானாலும், எங்கள் முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள் என, எதிர்காலத் தலைமுறைக்கு ஒழிவு மறைவின்றி, ஒப்புக்கொடுக்கின்ற வகையில் மனிதர்களாக நிமிர்கின்றார்கள்.

28/06/2019

கால் தூக்கியாடும் நம் கடவுள் ஆதி கோணேஸ்வரர்


சினிமா மீதான என் விருப்பும், அனுபவங்களும் ஆரம்பமானது தம்பலகாமத்தில். ஆனால் அந்த அனுபவம் டென்டுக் கொட்டகையில் தொடங்கியது அல்ல.  அதேபோல் இது சினிமா குறித்த பதிவும் அல்ல.  அன்மையில் புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே பேரையூரில் கண்டெடுகப்பெற்ற ஐம்பொன் சிலைகளின் மத்தியில் காணப்பெற்ற ஒரு விக்கிரகம் தொடர்பில் நண்பர்கள் சிலர் எழுப்பிய வினாக்களின் விடையாக என் அனுபவத்தினைப் பகிரும் பதிவு.


கோணேசர் கோவில் வீதியில் அல்லது பாடாசாலை விளையாட்டு மைதானத்தில், திறந்தவெளி அரங்கக் காட்சியாக, இலங்கை தகவற்துறை அமைச்சகத்தினால், கிராமங்கள் தோறும் சென்று காட்சிப்படுத்தும் செய்திச்சேவையின், ஆவணம் மற்றும் பிரச்சாரப் படங்களே எனக்கு முதலில் அறிமுகமான சினிமா.  ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது அவர்கள் நினைக்கும் போதோ,  ஒரு மாலை இருட்டில், திறந்தவெளியில் படங்காட்டுவார்கள். அது தொடர்பான முன்னறிவிப்பு பாடசாலையில் அறியத் தருவதால், காட்சிப்படுத்தும் வாகனம் வருவதிலிருந்து, திரும்பிச் செல்லும் வரை அருகிருந்து பார்க்கும் ஆர்வம் என்னது. காட்டப்படும் படங்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாகப் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரையில் ஒடும்.

ஒரு தடவை அவ்வாறு படம் பார்த்துக் கொண்டிருக்கையில்தான்,நாம் தினந்தோறும்  போற்றித் துதிக்கும்,  கோணேஸ்வரப் பெருமானின் திருவுருவம் திரையில் தெரிந்தது. வியப்பும், மகிழ்வும், கலந்த மனநிலையில் விழிகளைத் திரையில் விரித்துக் காத்திருந்தேன். காத்திருப்பு வீணாகவில்லை. மீண்டும் காட்சி தந்தார்  கால்தூக்கி ஆடும்  நம் கடவுள். இம்முறை சற்று விபரமாகவும், கிட்டவாகவும் பார்க்க முடிந்தது. சந்தேகமில்லை அது கோணேஸ்வரப் பெருமான்தான். சிறு வயதிலிருந்தே பாரத்திருக்கின்றேன். அபிஷேக அலங்காரங்கள் செய்திருக்கின்றேன். அந்த விக்கிரகத்தின் அழகை அனுஅனுவாக ரசித்திருக்கின்றேன். ஆனால் அவர் எப்படித் திரையில் தோன்றினார் ? திரும்பப் பார்க்கவோ விபரம் கேட்கவோ முடியாத சிறு வயது.  அந்தப் படத்தின் தலைப்பு " தஞ்சை வளர்த்த கலைச் சிற்பங்கள் " என்பதாக நினைவிருத்திக்கொண்டேன். வீட்டிற்குச் சென்றதும் அப்பாவிடம் வினவினேன். தஞ்சாவூர் சோழர் சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. ஆதலால் அங்கும் இதுபோன்ற விக்கிரகம் இருக்கலாம் என்றார். எங்கள் கோணேஸ்வரப் பெருமான் இந்தியாவிலும் இருக்கிறாரா? என நம்ப முடியாக் கேள்வியாக மனதில் புதைந்து போனது.

 1978லோ 79லோ தமிழகத்தின் புகழ்மிகு சிற்பி பத்மபூஷன் கணபதி ஸ்தபதி அவர்கள், முன்னர் அவரது தந்தையார் வைத்தியநாத ஸ்தபதி  கட்டிய ஆதிகோணேஸ்வர் கோவில் ராஜகோபுரத்தைக் காண்பதற்காக தம்பலகாமத்திற்கு வருகை தந்தார். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோவில், ராஜ கோபுரங்கள் வைத்தியநாத ஸ்தபதியால் நிர்மானிக்கப்பெற்றவை. அமைப்பிலும், வடிவத்திலும், இந்த இரு  கோபுரங்களும் ஒரே தோற்றந்தருபவை. அதே போன்று  இவ்விரு கோவில்களும் சோழப் பேரரசுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்டவை என்பதும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய குஞ்சர மல்லன் ராஜ ராஜப் பெருந் தச்சனின் வம்சாவளித் தோன்றல் வைத்திய நாத ஸ்தபதி என்பதும்  குறிப்பிடத்தக்கவை.

தந்தையார் நிர்மானித்த கோபுரத்தைப் பார்த்து மகிழ்ந்த கணபதி ஸ்தபதி அவர்கள்,  கோணேஸ்வரப் பெருமானையும் தரிசித்தார். இது சோழர்கால விக்கிரகம் எனச் சொல்லிக் கொண்டிருக்கையில், அப்பாவின் பின்னால் நின்ற என் மனதுள் அமிழ்ந்து போயிருந்த அந்தச் சந்தேகம் வினாவாக வெளி வந்தது. " இதுபோன்ற விக்கிரகம் தஞ்சாவூரிலும் இருக்கிறதா? " எனக் கேட்டுவிட்டேன். அங்கிருந்தோர்கள் எல்லோரையும் விட வயதிலும், தோற்றத்திலும் சிறியவனான என் கேள்விக்கு அவர் ஆர்வமாகப் பதில் சொன்னார். " ஆம் இருக்கிறது ." எனச் சொன்னவர் மேலும் விபரங்கள் சொன்னார். தான் அறிந்த வகையில் இது போன்ற விக்கிரகங்கள்  மூன்று அல்லது நான்கு இருப்பதாகச் சொன்னார்.  படத்தில் கண்ட காட்சி குறித்துச் சொன்ன போது, தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்த விக்கிரகத்தையே படத்தில் நான் கண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


இது என்ன முகூர்த்தம் என்ற கேள்வியைப் பெரியவர்கள் யாரோ கேட்க,  " நடன பால சம்பந்தர்"  முகூர்த்தம் என்றார். அந்தப் பதில் எல்லோர்க்கும் ஆச்சரியமாகவிருந்தது. ஏனெனில் நடன சிவன் தோற்றம் எனச் சிலரும், காளிங்க நர்தன கண்ணன் தோற்றம் எனச் சிலரும் கருதியிருக்க, அவர் சொன்ன பதில் மாறுதலாக இருந்தது. அது தொடர்பில் அவர் மேலும் விளக்கம் சொல்கையில்,  விக்கிரகத்தின் சிகையலங்காரம், மற்றும் முகபாவம், என்பன சோழர்கால விக்கிரகங்களின் தனித்துவம் எனவும், இரு கரங்களுடன் சிவருபங்கள் அமைவதில்லை என்றும், அதேவேளை இது கிருஸ்ணரூபம் இல்லையென்றும், அதற்கான விளக்கங்கள் பலவும் சொன்னார். அவையணைத்தும் இப்போது என் நினைவில் இல்லை.


நாயன்மார்களிள் ஒருவரது சிற்பத்தைச் சிவருபமாக வழிபடுதல் தகுமா என்றொரு கேள்வியும் அப்போதெழுந்தது. அதற்கும் கணபதி ஸ்தபதி அவர்கள் வித்தியாசமான, ஏற்புடையதான பதிலொன்றைத் தந்தார். சிவனடியார்களான நாயன்மார்கள், சிவனின் திருவிளையாடலுக்கான தோற்றங்களே. ஆதலால் அவர்களை சிவனாக வழிபடுதல் முறையே என்றவர், இந்தக் கோவிலின் நம்பிக்கைத் தெய்வமாக இறையருளால் எழுந்தருளியுள்ள இந்த முகூர்த்தத்தை சிவனாக அன்றி வேறு முகூர்த்தமாக் கருதல் கூடாது என்றும் சொன்னார்.

ஆதிகோணேஸ்வரராக எங்கள் ஆழ்மனதில் பதிந்து அருள்பாலிக்கும் சிவனாகவே  தம்பலகாமத்தில் கோவில் கொண்ட அம் முகூர்த்தத்தை, எக்காலத்திலும் கொண்டாடிப் போற்றுவதே நம் அனைவர்க்கும் சிறப்பு என்பேன்.
பின்னாட்களில் வரலாறுகள் தொடர்பான தேடல்களின் போதும், வாசிப்பின்போதும், இதேபோன்ற விக்கிரகங்கள், ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்திலும், வாஷிங்டன் அருங்காட்சியகத்திலும் "பால சம்பந்தராகவே " காட்சிப்படுத்தப்பட்டிருப்தைக் குறிப்புக்களில் அறிந்தேன். இப்போது புதுவையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது, தஞ்சை அருங்காட்சியத்தில் இருந்த சிலையா அல்லது மற்றுமொன்றா என்பது தெரியவில்லை.



இவ்விக்கிரகத் தோற்றத்தினை பால சம்பந்தராக அடையாளப்படுத்திக் காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காடசியங்களின் இணைய இணைப்புக்களைக் கீழே காணலாம்.


சென்னை அருங்காட்சியகம்

வாஸிங்டன் அருங்காட்சியகப் பட இணைப்பு

 ஆசிய அருங்கலைகள் சேமிப்பு

 பிற்குறிப்பு : சோழர்காலச் சிகையலங்காரம் தொடர்பில் கணபதி ஸ்தபதி அவர்கள் சொன்னது போன்ற தனித்துவமான சிகையலங்காரம்,  பின்னர் வெளிவந்த ராஜ ராஜ சோழன் திரைப்படத்தில், ராஜ ராஜன், குந்தவை நாச்சியர் ஆகிய கதாபாத்திரங்களின் ஒப்பனைகளில் கவனத்திற் கொள்ளபட்டது எனத் திரைத்துறைசார்ந்த நண்பரொருவர் சொன்னதாகவும் ஞாபகம்.



20/03/2019

தலைமுறைகள் கதை


எனக்குப் பிடித்தமான மொழிகளில் ஒன்று சினிமா மொழி. காட்சி மொழியான இதன் மூலம் கதை சொல்லல் என்பது தனிப்பெரும் கலை.  இந்தக் கதையாடல் மூலம் வரலாற்றைச் சொல்லுதல், பதிவு செய்தல் என்பது,  தகவல் தொழில்நுட்ப காலமாக வர்ணிக்கப்படும் சமகாலத்தில் முக்கியமானது. ஆனால் அவ்வாறான காட்சி ஆவணப்படுத்தல் தமிழில் அருத்தலாகவே உள்ளது. அவ்வாறான முயற்சிகளுக்கு அனுசரணையும் மிகக் குறைவாகவே உள்ளது.


வெகுஜனச் சினிமாவினை விட, ஆவணச் சினிமா மீது எமக்கு அலாதியான பிரியம். அவ்வாறான சினிமாக்களைக் காணும் போதெல்லாம் கற்றலின் தளம் விசாலமாகும். தருணம் வாய்க்கும் போதெல்லாம் அவ்வாறான சினிமாக்களைக் காண்பதிலும், தமிழில் அவ்வாறான  முயற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அடுத்துவரும் பத்தாண்டு காலத்தில் உலகின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுக்க இருக்கிறது அதிகரிக்கும் முதியோர் விகிதம் என்கிறது ஆய்வுகள். முதியவர்களைப் பராமரிப்பது, மன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பது, உடல் உள ஆரோக்கியங்களைப் பேணுவது, என்பவை தொடர்பில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என அகிலமெங்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுவிற்சர்லாந்தில் இயங்கும் முதியவர்களுக்கான முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று Connaissance 3. இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம், 60/65 வயதுகளின் பின் ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் தொடர்ந்து தாம் விரும்பும் விடயம் ஒன்றில் அறிவை விருத்தி செய்வதற்கு விரும்புகிறது. அது உல்லாசமாக குழுவாக சென்று ஒரு புதிய ஊரை அதன் இயற்கையை அறிந்தி கொள்வதாகவோ, புதிதாக ஒரு துறையை பற்றி தெரிந்து கொள்வதாகவோ, ஒரு கலையை படிப்பதாகவோ இருந்தால், அவர்களுக்கு அப்பல்கலைக்கழகம் உதவி செய்கிறது.

2018 ஆண்டு, இப்பல்கலைக் கழகத்தின் 20 வது வருட கொண்டாட்டத்தினை,  சுவிற்சர்லாந்தின் லுசான் மாநிலத்தில் உள்ள, ECAL எனும் நுன்கலைக் கல்லூரியுடன் இணைந்து நிகழ்த்த விரும்பியது. சினிமாவில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வரும் இளைஞர்களைக் கொண்டு 11 வித்தியாசமான குறுந்திரைப்படங்களை உருவாக்கி, குறித்த நாள் ஒன்றில் திரையிடுவது அதன் திட்டமாக இருந்தது.  இக்குறுந்திரைப்படங்கள், வயோதிபர்கள் பற்றிய இளைஞர்களின் மாற்றுப்பார்வை, வயோதிபர்களின் விருப்புக்கள், ஆற்றுகைகள் என்பவற்றை  மையமாக கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அத்திட்டத்தின் கருதுகோளாக இருந்தது.

இக் கல்லூரி மாணவனான கீர்த்திகன் சிவகுமார் " தலைமுறைகள் " எனும் குறுந்திரைப்படப் பிரதியொன்றுடன் என்னிடம் வந்தார்.  புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களில் பலரும் தமது முதுமையின்போது தாயகத்தில் வாழ்வதற்குப் பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். சமய வழிபாட்டுப் பாரம்பரியத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு, வயோதிபத்தில் தினசரி வழிபாடு சிறந்த மன ஆற்றுகையாக இருக்குமென்பதால், அது தினமும் கிடைக்கும் தமது சொந்த மண்ணைநோக்கி விரும்பிச் செல்வார்கள் எனும் கதை மூலம் கொண்டதாக இருந்தது. அக் கதையினை எங்கள் ஆலயத்தில் காட்சிப்படுத்த முடியுமா? எந்த நாட்களில் அவ்வாறு செய்வது பொருத்தமாக இருக்கும் ? என்ற கேள்விகளையும் முன் வைத்தார்.


ஆலய நிர்வாகத்தினர் மனமுவந்து அனுமதி தந்தார்கள். மேற்குலகில் முதியவர்களுக்கு வழங்கப்படும், வண்ணங்கள், மலர்கள், மனதுக்கு உகந்த இசை, தாளலயம், என்பன  உள்ளடங்கிய  Snoezelen Room therapy எனும் பயிற்சிச் சிகிச்சை முறையினை ஒத்ததாக இருப்பது எமது கோவில்களும், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளுமாகும்.

எங்கள் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயத்தில்,  காட்சியும், கானமுமான காலமாக ஐயப்ப மண்டல பூர்த்திநாள் அமையும். அந்த ஆண்டில் (2017) வந்த {யப்ப மண்டல விரதபூர்த்தி நாளில்,  வழிபாட்டின் சூழலுக்கு இடையூறு இல்லாதவகையில் காட்சிப்படுத்த அறிவுறுத்தினேன். திட்டமிட்டவகையில் எல்லாம் நடந்தபோதும், கதை முக்கிய பாத்திரங்களான தாத்தா, பாட்டி, அன்றைய தினத்தில் வரமுடியாது போனது. சரி அவர்களின் காட்சிகளைப் பின்னர் படமாக்கலாம் என்று படப்பிடிப்பினை நடத்தினார்கள். ஆனால் அடுத்து வந்த காலப்பகுதியில் தாத்தா பாட்டி வருவது  சாத்தியமற்றுப் போனது.

எல்லா முயற்சியும் வீணாகப் போய்விடும் என்ற வருத்தமுடன் கீர்த்திகன் மீண்டும் தொடர்புகொண்டார். இந்த முயற்சி தொடர்வதற்கு உதவ வேண்டும் என்றார்.  " எடுக்கப்பட்ட காட்சிகளுள்  நீங்களும் அத்தையும், நிறைய இடங்களில் தென்படுகின்றீர்கள். ஆகவே  தாத்தா, பாட்டியாக, நீங்களும் அத்தையும், நடித்துத் தந்தால் இதனை முடிக்கலாம்... வேறு வழி தெரியவில்லை. எனது குழுவினரும் இதனையே  சொல்கின்றனர்" என்றார்.

அவரது படிப்பிற்கான தரவு, பலரது கூட்டுழைப்பு, இளையவர்களின் எதிர்பார்ப்பு,  என்பவற்றுகும் அப்பால், எங்கள் மொழி சார்ந்த முயற்சி ஒன்று முற்றுப் பெறாது போவது பெருந்துயர். இதைவிடவும் இன்னுமொரு விடயம் இதில் முக்கியமாக இருந்தது. இந்த மூலக்கதையோடு பின்னிப்பிணைந்து வருவது எங்கள்  ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலய வரலாறு. அது காட்சி ஆவணமாவது தடைப்பட்டு விடுமே என்ற கவலையும் எமக்கிருந்தது. நாம் முயற்சிக்கலாம்  என எண்ணிய போது,  பெருந்தடையாக இருந்த தூரத்தினை ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தினர்  நீக்கியுதவினர். இப் படத்தில் அருமையாக நடித்த மூன்று பிள்ளைகளின் மத்தியில், தாத்தா, பாட்டியாக நாமும் கதையமர்ந்தோம். " தலைமுறைகள் " உருவானது.

2018 ஏப்பிரல் 26ல், Casino mont benon, Allée Ernest-Ansermet 3, 1003 Lausanne
 ல் அமைந்துள்ள Salle Padewrewski திரையரங்கத்தில், நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், இத்திட்டத்தில் உருவாகிய ஏனைய பத்துப் படங்களுடன் " தலைமுறைகள் " படமும் திரையேறியது.

அன்று காட்சிப்படுத்தப்பட்ட படங்களில், சினிமா மொழிசார்ந்து என் விருப்பதுக்குரிய தெரிவாக வேறு படங்கள் இருந்தபோதும், பிரியத்துக்குரியதாக " தலைமுறைகள் " இருந்தது.  ஏனென்றால் அது எங்களின் கதை.  அதற்குள் இணைந்து வருவது எங்கள் ஆலயத்தின் கதையும் கூட. சுவிற்சர்லாந்தின் கலைக்கல்லூரி ஒன்றின் ஆவணக் காப்பகத்தில், காட்சி ஆவனமாக எங்கள் கதை பதிவாகியிருப்பது வரலாற்றுச் சாசனம். காலங்கள் பல கடந்தும், அங்கு  கல்வி  பயிலும் மாணவர் ஒருவர், இக் காட்சி ஆவணத்தைப் பார்க்கையில்; அது எம் கதை சொல்லும்.

Les Générations எனப் பிரெஞ்சு மொழியிலான தலைப்பில் " தலைமுறைகள் " படத்தினை இங்கு காணலாம்.

இத் திரையிடலில் என்னை மிகவும் கவர்ந்த இரு வேறு படங்கள் குறித்து இன்னுமொரு பதிவில் பார்க்கலாம்.....

02/03/2019

கதிமோட்சம் தரும் காசியும், பற்றறுக்கும் படித்துறையும் !



காசி யாத்திரை ! வைதீக சம்பிரதாயத் திருமண வைபவத்தில் ஒரு கலகலப்பான சடங்கு. பிரம்மசரியத்திலிருந்து  துறவு பூனச் செல்லும் வரனை (மாப்பிளையை) லௌகீக வாழ்வியலுக்கு கிருகஸ்த்த தர்மத்திற்கு, அழைத்துவரும் அருமையான நிகழ்வு. பூவுலகின் இயற்பியலுக்கும், இயங்கியலுக்கும், அத்துனை அவசியமானது கிருகஸ்தம் எனும் இல்லறம். பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும், ஏனைய மூன்றுவகை வாழ்நிலைப்படிகளுக்கும், ஆதார சுருதியாக, அனுசரணையாக, அமைவது இல்லற தர்மம். 

இல்லற பந்தத்தில் இணைந்து, லௌகீக வாழ்வியற் சாகாரத்தில் நீந்துபவர்கள், அதிலிருந்து மீண்டு வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனப் பயணிப்பது குறைவு. அந்தப் பயணப்பிற்கான அனுபவத்தினை, ஆர்வத்தினைத் தருவது கிரகஸ்தத்தின் போதான காசியாத்திரை.

 கணவனும் மனைவியும் கங்கையில் நீராடி, முன்னோர்க்கான தர்ப்பணம் செய்வது முக்கியமானது. சென்ற ஆண்டில் அது நமக்கு திருவருளாக வாய்த்தது. காசியின் அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்த போதும் கனியவில்லை.

பாட்டுப் புலவன் பாரதியை, ஞானச்சித்தனாக மாற்றியது காசி எனப் படித்திருக்கின்றேன். அது சாத்தியமே என்பதை காசியின் தெருக்களிலும், கங்கையின் படித்துறைகளிலும், நடந்த பொழுதுகளில் நன்றாகவே உணர்ந்தேன்.

காட் என்றழைக்கப்படும் படித்துறைகள் கங்கை கரைதனில் விரிந்து கிடக்கிறது. 60க்கும் அதிகமான இந்த காட்களில், ஹரிச்சந்திராகாட்,  மகாநிர்வானி காட், என்பவற்றில் எப்போதும் உடலங்கள் எரிந்த வண்ணமேயிருக்கின்றன. சாதாரண இடமாக இருந்தால் அது மயானத்தில் பிணங்கள் எரிவதாகத்தான் சொல்வார்கள்.  ஆனால் காசியின் துறைகளில் எரிபவற்றை மகா நிவேதனம் எனச் சொல்லிக் கரங் கூப்பித் தொழுகின்றார்கள்.

லௌகீகத்தின் எல்லா ஆர்ப்பாட்டங்களும் அடங்கி ஈற்றில் நீறாகிப் போகும் நிதர்சனத்தை, ஏதோ ஒரு பொழுதில் மட்டும் உணர்த்துகின்ற தலமல்ல காசி.  இதுதான் உண்மை என்பதை எல்லா நொடிகளிலும் உணர்த்துவதாகவே இரண்டாயிரம் ஆண்டுகளாக  அந்த அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. முற்றாக எரிந்து நீறாவதற்கு முன்னதாகவே கங்கையில் உடலங்களை தள்ளிவிடுவார்கள் என்பதும், கங்கையில் மிதந்துவரும் உடலங்கள் நம்மைக் கடந்து செல்லும் எனவும் கதைகள் கேட்டதுண்டு. இன்று அவை வெறும் கதைகளாகப் போகும் வண்ணம், "கங்கா சேவ்" திட்டத்தின் மூலம், கங்கைக் கரை ஒரளவு தூய்மையாகவே இருக்கிறது. ஆனால் அகத் தூய்மை மாந்தருக்கு இப் புறத் தூய்மையெல்லாம் பொருட்டல்ல  எனும் உண்மையினையும், கங்கையின் துறைகளில் படிக்கலாம். அதனால்தான் அவை படித்துறைகளோ ?



காசி;  புராதன நகரம். அதன் கட்டுமானமும், நகர அமைப்பும் வித்தியாசமானது. நெடிதுயர்ந்த நெருக்கமான கட்டிடங்களும், குறுகலான வீதிகளும் கருகற்கள் பதித்த தரைவீதிகளும், ஐரோப்பாவின் புராதன நகர்கள் சிலவற்றை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. அந்தக் குறுகலான சந்துக்களில் பயணிக்கையில், நாம் எதிர்பாரா வேளையில், எங்கோ இருந்து வெளிப்பட்டு உரசிச் செல்லும் பசுக்களும், எல்லாத் தெருக்களிலும் நிறைந்திருக்கும் நாய்களும், காசிக்கான தனித்துவங்கள். காசியில் நாய்களைக் கால பைரவரின் அம்சமாகவே பார்கின்றார்கள். அதனாலோ என்னவோ அவை யாருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்றும் கூறுகின்றார்கள்.



காசி விஸ்வநாதர் மட்டுமல்ல, யாம் கண்ணுற்ற எல்லாக் கடவுளர் சிலைகளும் அருஉருவத் திருமேனிகளாகவே தென்பட்டன. விஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் எத்துனை பெருமையுளதோ, அதேயளவு அன்பு கொண்டு துதிக்கிறார்கள் அன்னபூரணியை, காலபைரவரை.
காசியில் உடல்கள் எரியும் துறைகளில் கூட ஒருபோதும் பிணவாடை வீசுவதில்லை. ஏன் மல்லிகையும் கூட அங்கே மணப்பதில்லை. கங்கைக் கரையமர்ந்து, வீசும் தென்றலை நுகர்ந்தால், வேதத்தின் சாரம் உறைந்திருப்பதை உணரக் கூடலாம்.



கை மத்துக்கொண்டு கடைந்தெடுத்த கட்டித் தயிர்களின் மேலே, பால்கோவா, பாதாம் பருப்பு முதல் பலவகையான பழங்கள் பதார்தங்கள் தூவி, சிறு மண்சட்டிகளில் தருகின்றார்கள். காசிக்குப் போய் அந்தக் கட்டித் தயிர் சாப்பிடாவிட்டால் பாவியெனப் பழிக்கலாம் எனச் சொல்லும் அளவிற்கு அற்புதமான சுவை. அதன் சுவை அற்புதமெனில், பரிமாறப்படும் அந்தக் குட்டிப் பாத்திரமும், அலங்கரிப்பும் அழகோ அழகு. அதனை ரசிக்கையிலும் , ருசிக்கையிலும், பற்றறுக்கும் பாடம் ஒன்றைப் பரிசளித்தான் இறைவன்.


ஒருமுறை மட்டுமே உபயோகித்துவிட்டு எறிந்து விடும், அந்தக் குட்டிச் சட்டிகளில் சிலவற்றை வாங்கிச் சென்றால், வீட்டில் விருந்தாளிகளுக்கு "ஐஸ்கிரீம்" பரிமாற நன்றாகவிருக்கும் என்ற எண்ணத்தில், அவ்வாறான சட்டிகளை பெற்றுக் கொள்ள முடியுமா என விற்பனையாளரிடம் வினவினோம். அதற்கு அவர்,  நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் அதற்கு முன்னதாக அறிந்து கொள்ள ஒன்று உண்டு என்றார். " காசி மோட்சம் தரும் பூமி. இங்கிருந்து பற்றோடு மண் எடுத்துச் செல்வது முறையல்ல. அருளலுக்கே உரித்தான கங்கா தீர்த்தம் மட்டுமே கொண்டு செல்வது நல்லது " என்றார். மண்மீதான பற்றறு எனும் மகத்தான பாடமாக இருந்தது.



அப்போதுதான் யோசித்தேன் காசி யாத்திரையின் தொடக்கத்தில், இராமேஸ்வரத்தில் சமுத்திர தீர்த்தமாடிப் பெறும் மண்ணிலே சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தபின் அதனைக் கங்கையில் கரைப்பதும், கங்கையில் நீர்மொண்டு, மறுபடியும் இராமேஸ்வரம் வந்து இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதையும் மரபாகக் கொண்டியிங்குகிறார்கள் நம் மக்கள். உண்மைதான்; பற்றுக்களறுத்து, பதி மோட்சம் தரும் புண்யபூமிதான் காசி !



- இன்னும் சொல்வேன்






04/01/2019

மண் பயனுற வேண்டும்..!

2018 விடைபெற்றுக்கொண்டது... எமது 60வது அகவை ஆண்டு அது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து நினைவுகளை அசைபோடத் தொடங்கிய ஆண்டு. வாழ்வின் பக்கங்களை நினைவு கொண்டு, பதிவு செய்யத் தொடங்கையில்,  அழுத்தமான துயர்களை, வருடத்தின் இறுதி மாதங்களில் அள்ளித் தந்து முடிந்து போன ஆண்டு.


ஒக்டோபர் இறுதி வாரத்தில், எங்கள்  குடும்பத்தின் இளையவன்,  எல்லோர்க்கும் பிடித்தமான  சாரங்கனின் மறைவு மீளமுடியாத பெருந்துயர். எண்ணங்களில் மறக்க முடியாத மனத்துயர். அதிலிருந்து அகல்வதற்குள்ளாக, சின்னமணிமாமாவின் சத்தியபாமா அத்தையின் இழப்புத் துயர்.  மாமாவின் தனித்துவமான வாழ்வில், பெருந்துணையாக நின்ற மாதரசி. அதிகம் பேசாது அன்பு செய்ய மட்டுமே தெரிந்த பெண்மணி, பிரிவுக்கு முதல்நாளில் பேசி மகிழ்ந்தது இன்னும் செவிப்பறைகளில் எதிரொலிக்கிறது.

நவம்பர் மாதம், நட்பு வட்டத்தில் இத்தாலி புஸ்பரூபனின் துணைவி ஜெயலலிதாவின் மறைவு. குருவாகவிருந்து கல்யாணம் செய்து வைத்த காலம் முதல், கனிவும், கண்ணியமும், தந்து பழகியவர்கள் லலிதாவும், ரூபனும். நோயுற்றிருந்த காலத்திலும், நம்பிக்கையோடு நற்பணிகள் புரிந்தவள். இயலாது போயிருந்த இறுதிக் கணங்களில் பார்க்க விரும்பிய போதும், முடியாது போனது துயரம்.

புலம் பெயர்வாழ்வில் அறிமுகமான சமூக ஆர்வலன், விளையாட்டு வீரன் பாபு டிசம்பரில் இல்லாது போனான். என் வானொலி நிகழ்சிகளின் இரசிகனாக அறிமுகமாகி,  நட்பாகத் தொடர்ந்தவன்.  நல்ல சிந்தனைகளும், நற்பயிற்சிகளும் கொண்டிருந்தவன். தொடர்புகள் குறைந்து போன நிலையிலும் இழப்பின் செய்தி வலிதருமளவிற்கு நல்லவனாக வாழ்ந்து மறைந்தான்.
இவ்விதமாக இழப்பின் துயர்கள் அழுத்திய போதும் இயன்றவரை இயங்கிக் கொண்டேயிருந்தோம். குளிரும், பனியும், பணிகளின் சுமைகளும்,  மனதின் துயர்நிலை வலியும்,  அமைதியுற இருந்து எழுதும் மனநிலையைத் தந்தில்லை. ஆனால் அவ்வாறான அமைதிகொள் யோகநிலை, இல்லாத நிலையும் உவப்பாக இருந்ததில்லை. இவ்வாறாகக் கடந்து போனது 2018ன் இறுதி நாட்கள்....
 
புதிய ஆண்டின் மலர்வு, மாற்றங்களையும், ஏற்றங்களையும், தரவேண்டும் எனும் நம்பிக்கையோடும் விருப்பத்தோடுமே  நாமெல்லோரும் பயணிக்கின்றோம். நாம் விரும்பும் மாற்றங்களால் இந்த மண் பயனுற வேண்டும், மாந்தர் பயனுற வேண்டும்.  மண்ணும்  மாந்தரும் பயனுற வேண்டுமாயின், மாசும் , மன அழுக்காறும் அகலவேண்டும்.

நீர்த்தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ண மீன்களுக்கு நடுவே   Cleaner fish எனும்  சுத்தப் பணி மீன் ஒன்று ஊர்ந்து செல்லும்.  அழகும், வண்ணமும் குறைவான  அந்த மீன், அமைதியாக ஆற்றுகின்ற பணியில், வண்ண மீன்கள் வளமாகச் சுற்றி வரும். ஒரு   Cleaner fishஐப் போல  வாழ்ந்து கடக்கும் நண்பர்கள் பலரோடினைந்து, மண்ணும், மாந்தரும், பயனுறவேண்டும்  என்னும் பெரு நோக்கங்களோடு,  2019னை ஆரம்பித்திருக்கின்றோம்.

இயற்கையெனும் மகாசக்தியை, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், எனப் பஞ்சபூதங்களாகப் பணிந்து போற்றும் மாண்பு இந்துக்களுக்கானது. இவற்றின் சமநிலை குழம்பும் வேளைகளில் இயற்கைப் பேரிடர்கள் தோன்றி, மக்களைக் காவுகொள்கின்றது. ஆதலால் அவற்றின் சமநிலை பேண சூழலைப் பாதுகாப்பது அவசியமானது.

நெகிழிப் ( பிளாஸ்டிக்) பொருட்களின் பாவனை, இந்தப் பூமியின் சூழலைப் பாதகம் செய்வதில் பெரும் பங்காற்றுகிறது. நமது சராசரி வாழ்க்கையில் பங்கெடுத்திருக்கும் இப் பொருட்களின் சிதைவுற்று மறுஆக்கம் காணாத தன்மையால், இந்த மண் வளம் குறைகிறது, நீர் வறண்டுபோகிறது, காற்று மாசடைகிறது. இதனைக் கவனத்திற் கொண்டு, இத்தாலி இந்துக்கள் கூட்டமைப்பு, பிறந்திருக்கும், 2019 புதிய ஆண்டினை சுற்றுச் சூழலின் நன்மை பேணும் ஆண்டாக பிரகடனம் செய்து, "Green Temple" திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.

 இத்திட்டத்தின் செயற்பாடாக, இத்தாலியில் உள்ள இந்துக் கோவில்களில் நெகிழிப் ( பிளாஸ்டிக்) பொருட்களின் பாவனையைக் குறைத்துக் கொள்ளவும், காலவோட்டத்தில் தவிர்த்துக் கொள்ளவும், விதந்துரைத்துள்ளதுடன், அதற்கான செயற்பணிகளையும் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக ஆலயங்களில் பிரசாதங்கள், நீர் வழங்குவதற்கான காகிதக் கோப்பைகள், மற்றும் தட்டுக்கள், என்பவற்றை, புத்தாண்டுப் பரிசுப் பொதியாக வழங்கியிருக்கிறது.

 

பெற்றுக் கொண்ட இந்து ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டுப் பூஜைகளின் பின்னதான பிரசாதம் வழங்கலில் இருந்து, விரைவில் மக்கிப்போய் மண்வளத்தினைக் காக்கக் கூடிய புதிய பொருட்களின் பாவனையைத் தொடங்கியிருக்கின்றோம்.


கடந்த நான்கு வருடங்களாகப் புதிய ஆண்டின் முதல் வார இறுதியில்,  " வலுவிழந்தோர்க்கான வாழ்வாதாரம் " தேடும் நிகழ்வினை  சுவிற்சர்லாந்தின் கிறபுண்டன், மற்றும் அயல் மாநிலம் வாழ் நண்பர்கள் சிலர் இணைந்து நடாத்தி வருகின்றார்கள். அவர்களோடு அம் முயற்சியில் இணைவதன் மூலம், தாயகத்தில் போரின் கொடுமையாலும், இயற்கையின் அனர்த்தத்தினாலும், வாழ்வாதாரம் தொலைந்து போன மக்களுக்கு உதவ முடிவதில் பெருந்திருப்தி. சென்ற ஆண்டில் வலுவிழந்த 52 குடும்பங்களுக்கு, வாழ்வாதாரம் செய்ய முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

எதிர்வரும் 06.01.2019 ஞாயிறு ஐந்தாவது ஆண்டாக அந்த நிகழ்வில் இணைகின்றோம், மேலும் பல புதிய செயல் யோசனைகளுடன். வாய்ச்சொல் வடிக்காது, செயலுக்காய் நொடிக்காது உழைக்கும் மக்களுடன் உடனிருப்போம் என்ற எம் எண்ணத்தின்வழியே புதிய ஆண்டினைத் தொடங்கியுள்ளோம் மாற்றங்களை நோக்கி........

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...