- படங்களின் மேலே அழுத்தினால் பெரிதாகக் காணலாம் -
ஐரோப்பாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர், மிதக்கும் நகரம் வெனிஸ் காண்பதில் ஆர்வம் பிறந்தது. காரணம் அதன் கலைத்துவம் தெரிந்து கொண்டதனால். உலகில் சிறந்த கன்னாடிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், என்பவற்றை உருவாக்கும் ஒரு கலைநிலமாகவே காட்சி தருகிறது வெனிஸ். இது எவ்வாறு..? வெனிஸின் தோற்றம் தெரிந்தால் புரியும் அந்த இரகசியம்.5000 - 7000 ம் நூற்றாண்டு காலப்பகுதியில், மூர்க்கத்தனமான கொள்ளையர் சமூகத்திடமிருந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓடிய ஒரு சமூக மக்கள், பாதுகாப்பான தங்கள் வாழ்விடமாகத் தெரிவு செய்த இடம்தான் இன்றைய வெனிஸ். அட்ரியாட்டிக் கடலின் வட மேற்கு முனையின், வெனித்தேரியன் குடாவில், கடலில் கலக்கும் கழிமுகத்தில், நதிகள் கொண்டு வந்த சேற்றுமண்ணிலான சதுப்பு நிலத் திட்டுக்களாக அமைந்த 118 தீவுக் கூட்டகளாலும், அவற்றினிடையே ஓடும் 150 அளவிலான நீரோட்டங்களாலும் ஆனதுதான் வெனிஸ்.
உயிரச்சத்தில் ஒடி வந்த மக்களுக்கு, பாதுகாப்பான மண்ணாக இருந்தபோதும், வாழ் நிலத்திற்கான தன்மையினை அந்நிலம் கொண்டிருக்கவில்லை. சாவதற்கல்ல; வாழ்க்கை வாழ்வதற்கே என்றுணர்ந்த மக்கள், வாழ்விற்கான ஆதாரங்களையும், வாழ்விடங்களையும், பெரும் முனைப்பில் அமைத்தெடுத்தார்கள். அது ஒரு சிலநாட்களில் முடிந்ததல்ல, நூற்றாண்டுகள் தொடர்ந்த பெரும் உழைப்பு.
இயற்கையின் நீரோட்டங்களில் பயணம் செய்து, ஈட்டிய பொருட்களில் வாழ்வமைத்தார்கள். சதுப்பு நிலங்களில் மரங்களாலான தூண்களை ஆழப்புதைத்து, தரையின் வலிமையான பாகம் வரையில் அவற்றை உள் நிறுத்தி, அவற்றின் மேலே, வதிவிடங்களைக் கட்டினார்கள். ஆழப் பெருங்கடல் தாண்டிப் பயணிக்கப் படகுகள் கட்டினார்கள். கட்டிய படகுகளில் சென்று வாணிபம் செய்தார்கள். செல்வம் குவிந்தது, சிறப்பும் சேர்ந்தது. அறிவையும் பொருளையும் முக்கியத்துவம் உணர்ந்து பயன்படுத்தினார்கள்.
கிரிஸ்டோ போரோ சபாடினோ எனும் நீர் வல்லுனரின் ஆலோசனையில், நீரோட்டங்களையும், வடிகால்களையும் ஒழுங்குபடுத்தினர். ஓவியத்திலும், கட்டிடக் கலையும் சிறந்த பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற கலைஞர்களின் அறிவுறுத்தலில், குறுகலானன தெருக்கள், பயணக் கால்வாய்கள், அவற்றின் மேலே பாசாரிகளுக்கான பாலங்கள், குடியிருப்புக்கள், கோபுரங்கள், மாட மாளிகைகள், கலங்கரை விளக்குக் கோபுரங்கள், என அத்தனையையும் பார்த்து, ரசித்துக் கட்டினார்கள். அழகிய வெனிஸ் நகரம் அற்புதமாக உருவாகியது.
வர்த்தக மையமாக, பொருளாதார பூமியாக, வெனிஸ் நகரம் பொலிவுபெற, கலைஞர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் கனவுதேசமானது வெனிஸ். 'மத்திய தரைக் கடலின் மகாராணி' என, அழகுறு கலைகளால் மகுடம் சூட்டி மகிழ்ந்து கொண்டாடினார்கள். அன்று தொடங்கிய கண்ணாடிப் பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்குமான பாரம்பரியம், இன்றுவரை உலகப் பிரசித்தம். ஆடலும், பாடலும், அழகுறு கலைகளும் நிறைந்த மண் என்பதால், காதலர் தேசமெனக் கொண்டாடுபவர்களும் உண்டு.
வெனிசின் முரானோ ( Murano) தீவு, உயர்தர கண்ணாடிக் கலைப்பொருட்களின் பிறப்பிடம். தமக்கே உரித்தான தனித்துவமான பராம்பரியத்துடன் கண்ணாடியில் பல்வேறுவிதமான கலைப் பொருட்களைப் படைத்து வருகிறார்கள். நாம் பாரத்துக் கொண்டிருக்கையிலேயே, கொதிகலனின் உருகியிருக்கும், கண்ணாடிக்கூழை, நீண்ட குழாய்களில் தோய்த்து, இலாவகமாகச் சுற்றிச் சுழற்றி, குவளைகளாகவும், மலர்சாடிகளாகவும், மனம் விரும்பும் பிராணிகளின் வடிவங்களாகவும், மாற்றி மாயா ஜாலம் காட்டுகிறார்கள்.
வெனிஸின் தெருக்களில் மோட்டார் வண்டிகளைக் காண முடியாது. தீவுகளுக்கிடையில் வீதிகள் போன்ற நீரோட்டங்களில், இயந்திர விசைப்படகுகள் இப்போது பயனிக்கின்றன. ஆனால் முன்னைய காலத்தில் ' கொண்டோலா ' எனும் தடி ஊன்றிப் பயணிக்கும் சிறு படகுகளிலேயே பயணங்கள் நடந்திருக்கின்றன. இயந்திரப் படகுகள் வந்துவிட்ட போதும், பளிச்சிடும் கறுப்பு வண்ணத்தில், நீள்வடிவில் அமைந்த கொண்டோலாப் படகுகளில் மக்கள் பயணிக்கின்றனர்.
' கொண்டோலா' படகுகளில் பயணிக்கும் காதலர்களின் காதல் வாழும், கால்வாய்களின் மேலான பாலங்களில், பூட்டுக்களைப் பூட்டிய பின், கால்வாயில் சாவிகளைப் போடுவதால் காதல் ஜெயிக்கும் எனும் நம்பிக்கைளும் இன்றுவரை நிலைத்திருப்பதை நேரில் காணலாம்.
வெனிஸின் வணிகக் குடும்பமொன்றில் பிறந்த மார்க்கோ போலோ, கிழக்காசிய நாடுகளில் மேற் கொண்ட பயணங்களின் போது கண்டுகொண்ட அனுபவங்களை, பின்னொரு காலத்தில் சிறையிலிருக்கையில், நூலாகப் படைத்தார். "மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புக்கள்" மிக முக்கிய வரலாற்றுப் பதிவாகவும், சரித்திரம் சொல்லும் சான்றாகவும், ஆவணமாகியது.
செங்கல்லும் சாந்தும் கொண்டு உருவான கட்டிடங்கள் காலங்கடந்தும், காரை கிளம்பியும், நின்று நிலைப்பது, வெனிஸின் கட்டடிக் கலையின் சிறந்த தொழில் நுட்பம். டோஜஸ் அரண்மனையும், அதன் சூழலும், ஐரோப்பிய நாகரீகத்திலிருந்து மாறுபட்ட கட்டிடக் கலை வடிவங்கள். இன்னும் சொல்வதனால் வெனிஸ் நகரத்துக்கேயான தனித்துவப் பாணி அதுவெனவும் சொல்லலாம். சொர்க்கத்திற்கு இனையான மகிழ்வைக் கொடுத்த அந்தப் பூமியில் நரகமும் இருந்தது.
- Ponte dei sospiri தொடர்பிலான இவ்விரு படங்களும் இணையத்தில் பெறப்பட்டவை -
நீரோட்ட வீதிகளில், படகுகளில் பயணித்து, குறுகலான தெருக்களில் நடந்து, மேம்பாலங்களில் ஏறிக் கடந்து, தண்ணீர் சூழலில் தலை நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களைப் பார்த்துக் களைத்துப் போய், ஏதாயினும் ஒரு மரத்தடியில் இருந்தால், எங்கோ ஒரு மெல்லிய சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும். ஆளரவம் நிறைந்த சூழலாயினும், அந்த இசையும், கண்களில் தென்படும் காட்சியழகும் தரும் அமைதியில், ஏகாந்தம் காணலாம். அதனால்தான் போலும், இன்றளவும் கலாரசிகர்களும், கலைஞர்களும், ஏன் பறவைகளும் கூட, வெனிஸ் நகர் நோக்கி விரும்பி வருகின்றனர்.
சேற்று நிலத்தை, செல்வமும், அழகும் கொளிக்கும் அற்புதபூமியாக மாற்றிய மாமனிதர்களின் வாரிசுகள் தாம் என்பதை, தொடரும் தங்கள் பாராம்பரியங்களுடன் அடையாளப்படுத்தி நிற்கும் அற்புத மனிதர்களாக அவர்கள் வாழும் வரை, தண்ணீரின் மீது கம்பீரம் குறையாத கலைநகராக, "மத்திய தரைக் கடலின் மகாராணி" யாகக் காட்சி தரும் வெனிஸ்.
No comments:
Post a Comment