02/03/2019

கதிமோட்சம் தரும் காசியும், பற்றறுக்கும் படித்துறையும் !



காசி யாத்திரை ! வைதீக சம்பிரதாயத் திருமண வைபவத்தில் ஒரு கலகலப்பான சடங்கு. பிரம்மசரியத்திலிருந்து  துறவு பூனச் செல்லும் வரனை (மாப்பிளையை) லௌகீக வாழ்வியலுக்கு கிருகஸ்த்த தர்மத்திற்கு, அழைத்துவரும் அருமையான நிகழ்வு. பூவுலகின் இயற்பியலுக்கும், இயங்கியலுக்கும், அத்துனை அவசியமானது கிருகஸ்தம் எனும் இல்லறம். பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும், ஏனைய மூன்றுவகை வாழ்நிலைப்படிகளுக்கும், ஆதார சுருதியாக, அனுசரணையாக, அமைவது இல்லற தர்மம். 

இல்லற பந்தத்தில் இணைந்து, லௌகீக வாழ்வியற் சாகாரத்தில் நீந்துபவர்கள், அதிலிருந்து மீண்டு வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனப் பயணிப்பது குறைவு. அந்தப் பயணப்பிற்கான அனுபவத்தினை, ஆர்வத்தினைத் தருவது கிரகஸ்தத்தின் போதான காசியாத்திரை.

 கணவனும் மனைவியும் கங்கையில் நீராடி, முன்னோர்க்கான தர்ப்பணம் செய்வது முக்கியமானது. சென்ற ஆண்டில் அது நமக்கு திருவருளாக வாய்த்தது. காசியின் அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் என எண்ணியிருந்த போதும் கனியவில்லை.

பாட்டுப் புலவன் பாரதியை, ஞானச்சித்தனாக மாற்றியது காசி எனப் படித்திருக்கின்றேன். அது சாத்தியமே என்பதை காசியின் தெருக்களிலும், கங்கையின் படித்துறைகளிலும், நடந்த பொழுதுகளில் நன்றாகவே உணர்ந்தேன்.

காட் என்றழைக்கப்படும் படித்துறைகள் கங்கை கரைதனில் விரிந்து கிடக்கிறது. 60க்கும் அதிகமான இந்த காட்களில், ஹரிச்சந்திராகாட்,  மகாநிர்வானி காட், என்பவற்றில் எப்போதும் உடலங்கள் எரிந்த வண்ணமேயிருக்கின்றன. சாதாரண இடமாக இருந்தால் அது மயானத்தில் பிணங்கள் எரிவதாகத்தான் சொல்வார்கள்.  ஆனால் காசியின் துறைகளில் எரிபவற்றை மகா நிவேதனம் எனச் சொல்லிக் கரங் கூப்பித் தொழுகின்றார்கள்.

லௌகீகத்தின் எல்லா ஆர்ப்பாட்டங்களும் அடங்கி ஈற்றில் நீறாகிப் போகும் நிதர்சனத்தை, ஏதோ ஒரு பொழுதில் மட்டும் உணர்த்துகின்ற தலமல்ல காசி.  இதுதான் உண்மை என்பதை எல்லா நொடிகளிலும் உணர்த்துவதாகவே இரண்டாயிரம் ஆண்டுகளாக  அந்த அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. முற்றாக எரிந்து நீறாவதற்கு முன்னதாகவே கங்கையில் உடலங்களை தள்ளிவிடுவார்கள் என்பதும், கங்கையில் மிதந்துவரும் உடலங்கள் நம்மைக் கடந்து செல்லும் எனவும் கதைகள் கேட்டதுண்டு. இன்று அவை வெறும் கதைகளாகப் போகும் வண்ணம், "கங்கா சேவ்" திட்டத்தின் மூலம், கங்கைக் கரை ஒரளவு தூய்மையாகவே இருக்கிறது. ஆனால் அகத் தூய்மை மாந்தருக்கு இப் புறத் தூய்மையெல்லாம் பொருட்டல்ல  எனும் உண்மையினையும், கங்கையின் துறைகளில் படிக்கலாம். அதனால்தான் அவை படித்துறைகளோ ?



காசி;  புராதன நகரம். அதன் கட்டுமானமும், நகர அமைப்பும் வித்தியாசமானது. நெடிதுயர்ந்த நெருக்கமான கட்டிடங்களும், குறுகலான வீதிகளும் கருகற்கள் பதித்த தரைவீதிகளும், ஐரோப்பாவின் புராதன நகர்கள் சிலவற்றை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. அந்தக் குறுகலான சந்துக்களில் பயணிக்கையில், நாம் எதிர்பாரா வேளையில், எங்கோ இருந்து வெளிப்பட்டு உரசிச் செல்லும் பசுக்களும், எல்லாத் தெருக்களிலும் நிறைந்திருக்கும் நாய்களும், காசிக்கான தனித்துவங்கள். காசியில் நாய்களைக் கால பைரவரின் அம்சமாகவே பார்கின்றார்கள். அதனாலோ என்னவோ அவை யாருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்றும் கூறுகின்றார்கள்.



காசி விஸ்வநாதர் மட்டுமல்ல, யாம் கண்ணுற்ற எல்லாக் கடவுளர் சிலைகளும் அருஉருவத் திருமேனிகளாகவே தென்பட்டன. விஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் எத்துனை பெருமையுளதோ, அதேயளவு அன்பு கொண்டு துதிக்கிறார்கள் அன்னபூரணியை, காலபைரவரை.
காசியில் உடல்கள் எரியும் துறைகளில் கூட ஒருபோதும் பிணவாடை வீசுவதில்லை. ஏன் மல்லிகையும் கூட அங்கே மணப்பதில்லை. கங்கைக் கரையமர்ந்து, வீசும் தென்றலை நுகர்ந்தால், வேதத்தின் சாரம் உறைந்திருப்பதை உணரக் கூடலாம்.



கை மத்துக்கொண்டு கடைந்தெடுத்த கட்டித் தயிர்களின் மேலே, பால்கோவா, பாதாம் பருப்பு முதல் பலவகையான பழங்கள் பதார்தங்கள் தூவி, சிறு மண்சட்டிகளில் தருகின்றார்கள். காசிக்குப் போய் அந்தக் கட்டித் தயிர் சாப்பிடாவிட்டால் பாவியெனப் பழிக்கலாம் எனச் சொல்லும் அளவிற்கு அற்புதமான சுவை. அதன் சுவை அற்புதமெனில், பரிமாறப்படும் அந்தக் குட்டிப் பாத்திரமும், அலங்கரிப்பும் அழகோ அழகு. அதனை ரசிக்கையிலும் , ருசிக்கையிலும், பற்றறுக்கும் பாடம் ஒன்றைப் பரிசளித்தான் இறைவன்.


ஒருமுறை மட்டுமே உபயோகித்துவிட்டு எறிந்து விடும், அந்தக் குட்டிச் சட்டிகளில் சிலவற்றை வாங்கிச் சென்றால், வீட்டில் விருந்தாளிகளுக்கு "ஐஸ்கிரீம்" பரிமாற நன்றாகவிருக்கும் என்ற எண்ணத்தில், அவ்வாறான சட்டிகளை பெற்றுக் கொள்ள முடியுமா என விற்பனையாளரிடம் வினவினோம். அதற்கு அவர்,  நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் அதற்கு முன்னதாக அறிந்து கொள்ள ஒன்று உண்டு என்றார். " காசி மோட்சம் தரும் பூமி. இங்கிருந்து பற்றோடு மண் எடுத்துச் செல்வது முறையல்ல. அருளலுக்கே உரித்தான கங்கா தீர்த்தம் மட்டுமே கொண்டு செல்வது நல்லது " என்றார். மண்மீதான பற்றறு எனும் மகத்தான பாடமாக இருந்தது.



அப்போதுதான் யோசித்தேன் காசி யாத்திரையின் தொடக்கத்தில், இராமேஸ்வரத்தில் சமுத்திர தீர்த்தமாடிப் பெறும் மண்ணிலே சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தபின் அதனைக் கங்கையில் கரைப்பதும், கங்கையில் நீர்மொண்டு, மறுபடியும் இராமேஸ்வரம் வந்து இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதையும் மரபாகக் கொண்டியிங்குகிறார்கள் நம் மக்கள். உண்மைதான்; பற்றுக்களறுத்து, பதி மோட்சம் தரும் புண்யபூமிதான் காசி !



- இன்னும் சொல்வேன்






No comments:

Post a Comment

தியான நிலம்.

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை  நுட்பமான, சரியான மனிதனா...