கோடுகள் போட்ட பைஜாமா சட்டை, தலையில் தொப்பி, கையில் புல்லாங்குழல் சகிதமாக அரங்கில் ஒரு சின்னப் பையன். திரை விலகுகிறது. அவையைப் பார்த்ததும் பேசவேண்டிய வசனம் மறந்து போகிறது அவனுக்கு. திரையை மூடச்சொல்கிறார் ஆசான். அவனருகே வந்தவர், " நான் கீழே போய் நிற்கின்றேன். நீ என்னையே பார்க்க வேண்டும், என்னை மட்டுமே பார்க்க வேண்டும்.." எனச் சொல்லிப் பதிலுக்குக் காத்திராதவராக, அரங்கிலிருந்து கீழிறங்கிச் சென்று விடுகிறார்.
திரை மறுபடியும் விலகுகிறது. ஆசானைத் தேடியவன், அவையின் முடிவில் காண்கின்றான். அங்கிருந்தவாறே தொடங்கு எனக் கையசைக்கின்றார் அவர். "Good evening ladies and gentleman. I am Pied Piper of hamelin.. " சிறுவன் பேசத் தொடங்கியதும், அவை மகிழ்ந்து ஆர்ப்பரிக்கிறது. அடுத்த சில நிமிடங்களுக்கு அவன் Piperராக அரங்காடுகின்றான்.
- கலை ஆசான் கவிஞர். சோ.ப எனும் சோ. பத்மநாதன் ஆசிரியர் -
அது ஆதி கோணேஸ்வரா கலையரங்கு. ஆனால் அப்போது மகாவித்தியாலய கலை அரங்கு. அரங்கேறிய அந்தக் கதை, The Pied Piper of hamelin. அரங்காற்றுவித்த ஆசான் கவிஞர் சோ.ப எனும் பத்மநாதன் ஆசிரியர். ஆங்கில அறிவுத் திறன் போட்டிக்கான, அந்தக்கதையினை, அரங்காற்றிய சிறுவன் நான். அப்போது எனக்கு வயது ஒன்பது. ஐம்பது ஆண்களுக்கு முன்னதான நினைவுகளை மீட்டிப் பார்க்கும் ஒரு நனவிடை தோய்தல் இது.
எழுத்து, பேச்சு, பாடல், கூத்து, பயிற்சி, அறிவு, நேயம், என எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்த கல்விச்சாலை, தம்பலகாமம் மகா வித்தியாலயம். இப்போ ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம். தம்பலகாமத்தின் தனித்துவமே கோணேஸ்வரப் பெருமானின் கோவில்தான். அவனன்றி அணுவும் அசையாது என்பது போல், அவ்வாலயத்தின் தொடர்பற்று எதுவுமில்லை தம்பலகாமத்தில். ஏனெனில் தம்பலகாமத்தின் வரலாறே கோணைநாதனுடன் பின்னிப் பிணைந்ததுதானே. அந்தவகையில் 2000ம் ஆண்டுகளில் மகாவித்தியாலயம், ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயமாக மாற்றம் பெற்றிருப்பது கூட அழகும் பொருத்தமுமானதே.
கோணேஸ்வரப் பெருமான் சாமாகாண இசைப்பிரியன். அதனாற்தான் போலும் அந்த மண்ணில் அவ்வளவு கலைகள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்த, கல்வித்தாய் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம். எங்கள் அன்பு, அறிவு, ஆற்றல், மகிழ்வு, என எல்லாமுமாகி நின்ற எங்கள் தாய்க்கு இந்த வருடம் அகவை 100. இந்த நூற்றாண்டு காலப்பயணத்தில், கற்றவர்கள், கற்பித்தவர்கள் எனப் பலர் வித்தியாலயத்தின் பெருமடியில் தவழ்ந்து சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமறிந்தது, நமது கற்கைக்காலச் சூழல் மட்டுமே.
- வகுப்புத் தோழர்களில் சிலர் -
ஒவ்வொரு மனிதரினிதும் கல்லூரிக் காலங்களே, வாழ்வின் வசந்தகாலங்கள். எங்கள் வசந்தத்தின் நினைவுகள் என்றும் மகாவித்தியாலமாக நிறைந்திருக்கக் காரணங்களும், காரியங்களுமெனப் பல கதைகளும், கதாமாந்தர்களுமுண்டு. கடந்து போன அந்தக் காலத்தின் நினைவுக் குறிப்புக்களில் மறக்கப்பட முடியாதவை அவை. முழுமையாக அவற்றை ஒரு கட்டுரையில் தொகுப்பது சாத்தியமில்லையாயினும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்வது அவசியம் எனக் கருதுகின்றேன்.
திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயத்திற்கான தனித்துவம் எங்கள் காலத்தில் மிகுதியாக இருந்தது என்பேன். நகர்புறப் பாடசாலையாக இல்லாத போதும், நகர்புறப் பாடசாலைகளின் கல்வித் தரத்துக்கும், கலை, ஆற்றுகை வெளிப்பாடுகளுக்கும், இணையாக இருந்தது எங்கள் வித்தியாலயம். அதற்கான முக்கிய காரணம், எங்கள் அதிபரும், ஆசிரியர்களும் தான். அவர்களில் பெரும்பாலோனோர் தம்பலகாம மண்ணின் மைந்தர்களாக இருந்தார்கள் என்பது மேலும் சிறப்பான காரணம் எனலாம்.
அதிபர். பொன். சித்திரவேல் -
எங்கள் பாசத்திற்குரிய ஆசிரியைகள், கெங்காம்பிகை, கமலாதேவி, கனகம்மா, அமுதமலர், வனிதா, ஜீவா ரீச்சர் ஆகியோரின் அரும்பணிகள் குறித்து எவ்வளவு சொல்ல முடியும். மகளிருக்கான தனித்துவத்தை எங்கள் மனங்களின் பதியும் வகை வாழ்ந்த மாமணிகள் அவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்கள் பிள்ளைகள் போல் கொண்டாடி மகிழ்ந்தவர்கள் எங்கள் ஆசிரியைகள் என்றால், அது மிகையல்ல.
- தாயின் மடியில் -
அதிபர் முதல், ஆசிரிய ஆசிரியைகள் வரை, இவ்வாறு இயல்பாக இருந்ததனால்தான், கல்வியைச் சுமையாகக் கருதாமல், சுகமாகக் கற்றோம். கலைகளை இயல்பாகப் பழகி, திறனாக வெளிப்படுத்தினோம். முத்தமிழ்விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், எதுவாயினும் சரி, எங்கள் பாடசாலை முன்னணியிலும், முக்கியத்துவத்திலும் இருந்தது. அதன் மூலம் கற்ற வகையிலேயே, வாழ்வில் இயல்பான மனிதர்களாக இன்றுவரை எங்களால் வாழவும் முடிகிறது. இதை என்றும் மறப்போமா..? மறுப்போமா..?பாடசாலை முடிந்து, வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்த போதும், அன்னை மடியெனத் திகழ்ந்த, கல்விக் கூடத்துக்கும் எமக்குமான பந்தம் தொடர்ந்தே வந்தது. விழாக்கள், விஷேட ஒன்று கூடல்கள், விளையாட்டுப்போட்டிகள், என அத்தனை மகிழ்வுகளிலும், அன்போடு இணைந்தே இருந்தோம்.
- தமிழறிவித்தோர் முன்னிலையில் -
நாட்டின் சூழலும், காலமும், எங்களைத் தூக்கித் தூர வீசியதில், ஒற்றைப் பறவையாய், உதிரிப்பூக்களாய், எட்டுத் திசையும் சிதறி வீழ்ந்தோம். இப்போ, பூமி பந்தின் ஒவ்வொரு சுழலிலும் இருந்து, எழுந்து வருகின்றோம், எங்கள் கல்வித் தாயின் கலை நூற்றாண்டு நிறைவு காண.
உலகின் எந்த மூலையிருந்தாலும், எந்த நிலைகளிலிருந்தாலும், தம்பலகாமம் மகாவித்தியாலய மாணவர் எனும் மகிழ்வும், பெருமையும், இன்றளவும் உண்டு. இன்பத் தமிழாகி, மொழியாகி, எம்முள் கலந்திருக்கும் எங்கள் கல்வித் தாயே ! உன் பணியும், புகழும், இன்னும் பல நூற்றாண்டுகள் விரிந்து செல்ல உன் பிள்ளைகள் நாம் வாழ்த்தவில்லை, உன் வழி வருகின்றோம்.
நடந்தாய் வாழி மாவலியாய், மாணிக்க கங்கையாய் !
-----------------------------------------------------------------------------------------------------------------
தம்பலகாமம், ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம் எனும் எமது கல்விச்சாலையின் நூற்றாண்டு விழா மலருக்காக எழுதப்பட்ட கட்டுரையிது. இக் கட்டுரையும், இவ்விழா தொடர்பில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டதும், பல ஆண்டுகளின் பின் தாயின் மடியில், தலைவைத்துப் படுத்திருந்து, பசுமை நினைவுகளை மீட்டிப் பார்த்த பரமசுகம்.
எண்ணற்ற நிகழ்வுகள் சந்தித்திருந்தாலும், எழுத்தறிவித்தவர்கள் முன்னிலையிலான அன்றைய ஆற்றுகை ளவிலா ஆனந்தம் தந்தது.
இக் கட்டுரையில் பெயர் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் குறித்தும், அவர்களுடனான அனுபவங்கள் குறித்தும் நிறையவே எழுதியுள்ளேன், இன்னும் பகிர்வேன்.
கலை தந்த ஆசான் கவிஞர் சோ.ப அவர்களின் பார்வைக்கு இக் கட்டுரையை அனுப்பி வைக்க, அவர் எழுதிய மடல் அற்புதமான விருதாகச் சேர்ந்தது.
No comments:
Post a Comment